Thursday, January 11, 2018

மானசீக திவ்ய தேச தரிசனம்

பல வருடங்களுக்கு முன்னமேயே மயிலாப்பூரை ஒரு 'happening place' என்று சொல்வர் என் நண்பர்கள் சிலர். மயிலையில் தான் சில சபாக்களில் நாடகங்கள் மேடையேறிக் கொண்டிருக்க, நடனங்கள் ஒரு புறம் அரங்கேற, அள்ளித்  தெளித்தாற் போல் மயிலை முழுதும் பரவிக் கிடைக்கும் கோவில்களில் உபன்யாசங்களும் பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளும் களை கட்டி ரசிகர்களை எங்கு போவது என்று முடிவு செய்ய முடியாமல் திணறும் காட்சிகளை வெகு சாதாரணமாக பார்க்க முடியும்.

இருபது வருடங்களுக்கு முன் நிலவிய அந்த நிலை இன்றும் - தொலைக்காட்சி,  உள்ளங்கையில் திரைப்படம், வலைத்தளங்கள் போன்ற கவர்ச்சிகளூடும் தொடர்ந்து இருப்பது வியக்க வைக்கும் சமாச்சாரமே. ஆனால் லஸ் கார்னரில் இருந்து கொண்டு பல நாட்கள் பிரயத்தனப்பட்டு பார்க்க வேண்டிய திவ்ய தேசங்களை மாதம் நான்காக இக்காலத்துக்கு ஏற்ப சுலப தவணைகளில் கொடுப்பது என்பதை நம்புவது கொஞ்சம் கடினமே . இதைத்தான் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகேடமி  கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்துடன் இணைந்து  சில காலமாக செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகிலுள்ள ஒரு சிறிய, ஆனால் அழகிய அரங்கில் பொது மக்களை வரவேற்று விடா ப்பிடியாக கையில்  சுடச்சுட   ஒரு கோப்பை தேநீரையும் கொடுத்து,  இலவசமாக மூன்றோ அல்லது நான்கு திவ்ய தேசங்களுக்கோ  ஞான திருஷ்டியிலேயே அழைத்து செல்கிறார்கள்.

இந்த திவ்ய தேச விருந்துக்கு நடுவே  இங்கு நடக்கும் மற்றுமொரு   போட்டியிலும் மக்கள்  திணறுகிறார்கள்.  ஆம் , ஒவ்வொரு திவ்ய தேசத்தின் கதையையும் சிறப்புகளையும் தகுந்த ஆதாரங்களோடு முனைவர் சுதா சேஷய்யன் விளக்க அந்தந்த திவ்ய தேசங்களின்  பெருமை சொல்லும் பாடல்களையும் சுத்தமான கர்நாடக இசையாக  பக்க (கா) வாத்தியங்களுடன் கொடுக்கும் திருமதி வசுந்தரா ராஜகோபால் அவர்களின் குரல் வளம் 'சபாஷ் சரியான போட்டி' என்று கண் மூடி அனுபவிக்க வைக்கிறது.


இன்று நடந்த சொற்பொழிவில் எப்படி :

  • அரிமேய விண்ணகரம் என்ற திவ்ய தேசத்தில் கண்ணன் கோவர்த்தன கிரியை தூக்கும் பொழுது தன் சுண்டு விரலில் அம்மா போட்ட ராக்ஷா ரஸம் (இக்கால நகப்பூச்சு)  அழிந்து போய்விட்டதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டது ; 
  • திருவண் புருடோத்தமன் மக்களுக்கு நன்மை அளிக்க, தான் பழியைச் சுமந்தது, மற்றும் அழும் குழந்தைக்கு அன்னை பராசக்தியே நேரில் வந்து பாற்கடலையே பாலாகக் கொடுத்து பசியை தீர்த்தது ; 
  • திருத்தெற்றியம்பலம் என்னும் திவ்ய தேச விஜயத்தால் உலகையே ஆளும் வாய்ப்பும் கிட்டும் (இன்னும் நம்ம உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு  இது தெரியாது போல! ) ; 
  • திரு அனந்த புரம் என்ற திருவனந்தபுர பெருமாள் 12000 சாளக்கிராமத்தை மேல்  சயனித்திருப்பது  
        போன்ற அருமையான செய்திகளை எளியவர்களுக்கும் புரியும் படியான சொற்களில் உரைத்த மருத்துவருக்கு எவ்வளவு ஷொட்டு கொடுத்தாலும் மிகையாகாது . இருந்தாலும் அவருக்கு ஈடு கொடுத்து தேனாய் இசைத்த  வசுந்தரா அவர்கள் மிக அருகிலே அதே உயரத்திலேயே இருப்பது நமக்கு இரட்டை விருந்து .

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நான் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த உபன்யாச உரையை அனைவருக்கும் பகிர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்,  இதுவரை பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களைக் பார்த்து விட்டதாகவும் இன்னும் மீதமிருக்கும் விண்ணுலகில் உள்ள இரண்டு   திவ்ய தேசத்துடன் இந்நிகழ்ச்சி முடிவடையும் என்று அறிவித்தது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

ஆனால் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இது போன்ற சிறந்த சொற்பொழிவுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கும் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகேடமியால் சும்மா இருக்க முடியாது என்றே தோன்றும் எனக்கு  . கூடிய விரைவில் மற்றுமொரு விருந்தை படைக்க அந்த பெருமாளே  அவர்களுக்கு  அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அந்த நல்ல உள்ளங்களை  வாழ்த்துவதில்  எந்த தயக்கமுமில்லை !

1 comment:

  1. தங்களின் எழுத்து நடை மற்றும் வர்ணனை மிக அருமை.- K.G.Venkateswaran

    ReplyDelete