Monday, July 18, 2016

சிரிக்க சிந்திக்க

ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்துவது
பேச்சாளர்களை எப்படி தேர்வு செய்வது
சிரிப்போ , சிந்தனையோ --- எப்படி திகட்டாமல் கொடுப்பது
வந்தவர்களை எப்படி கவனிப்பது
நிகழ்ச்சியைக் காண வந்தர்களுக்கு எப்படி திகட்டாத, அசௌகரியங்கள் இல்லாத சில மணி நேரங்களைக் கொடுப்பது

ஈவண்ட் மானேஜ்மேன்ட் என்ற பெரிய சமாச்சாரத்தை தங்களின் உழைப்பினாலும், முப்பது வருடங்களுக்கு  மேற்பட்ட அனுபவத்தினாலும்  அனாயாசமாக செய்து காட்டி இருக்கும் சென்னை திருவல்லிக்கேணி ஹியூமர் கிளப் நிர்வாகிகளுக்கு ஒரு பெரிய ஷொட்டு.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்பாளிகள் வந்தாலும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நான்கு மணிக்குச் சரியாக   மாம்பலம் சகோதரிகளின் இனிய குரலில் அரங்கில் 'சாந்தியை நிலவ' விட்டு  நிகழ்ச்சியை தொடங்கியதிலேயே தெரிந்தது இவர்களின் திட்டமிடும் ஆற்றல் .

தொடக்கத்திலிருந்தே  காரியத்தில்  குறியாய் இருந்து, தான் அதிகம் பேசாமல் , முக்கிய பேச்சாளர்களை பேச விட்டு, இடை இடையே அடுத்த வருட நிகழ்ச்சிக்கும் ஆதரவு தேடும்  இந்தக் கிளப்பின் செயலாளர் பாராட்டப் பட வேண்டியவரே.

முதலில் உரையாற்ற வந்த சொல்லின் செல்வர் சுகி சிவம் அவர்கள் தமிழ் மடை திறந்து நகைச்சுவை கலந்த உரையில் அனாயாசமாக இன்றைய தேதியில் முக்கியமாக எல்லோராலும் நிமிர்ந்து பார்க்கக் கூடிய சொல் - 'மகிழ்ச்சி' - என்றால் என்ன என்பதை:

-  "40%  தான் விரும்பும் ஒருவருடனோ இல்லை தன்னை விரும்புவருடனோ இருப்பது,
- மற்றோர் 40% தான் விரும்புவதைச் செய்வது என்றும்
- பத்து சதவிகிதம் தான் இதில் பணம் இடம் பெறுகிறது" என்றும் சொல்லி சுகமான குளிர் அரங்கில் கண் அசர முயலும் சிலரின் கண்களையும் திறந்து வைத்தார்.

இவருக்கு கணக்கு சரியாக வராதோ என்று நாம் வியப்பதற்கு முன் நிதானமாகத் தொடர்ந்தார் 'மீதமுள்ள பத்து சதவிகிதத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் ' என்று. இவர் குறிப்பிட்ட ' Happiness' என்ற ஒரு குறும் படத்தை யூ டியூபில் பார்த்துக் கொள்ள பலரும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

யாரோ ஒருவர் மஹாபெரியவரிடம் ராம ஜென்ம பூமிக்குப் போகுமுன் உத்தரவு வாங்கப் போன போது, பெரியவர் அவரை 'கிருஷ்ண ஜென்ம பூமியையும்' பார்த்து வரச் சொன்னதின் உள் அர்த்தம் - நன்கு அனுபவிக்கக் கூடியதாக இருந்தது.

இவர் ஏன் பேச்சை முடிக்கிறார் என்று நாம் ஏங்கும் பொழுது   தொடர்ந்த   மோஹன சுந்தரம் , ஒரு சர வெடிப் பேச்சாளர். ஒரே வாக்கியத்தில் சில முறை ஒன்றுக்கு மேற்பட்ட நகைச் சுவையையும் கலந்து ஒரு நாற்பத்து ஐந்து நிமிடங்கள் அரங்கைக் கலக்கி விட்டு அமர்ந்த போது தொலைக் காட்சியில் முன்பெல்லாம் தென்பட்ட மதுரை முத்துவை நினைத்து மனம் ஏங்கியது - அப்படி ஒரு இடை விடாத நகைச் சுவை. இவர் பேச்சின்  தனிச் சிறப்பு -நிறைய வீட்டு  சம்பந்தப்பட்ட நகைச்சுவை இருந்தாலும் அவற்றை  வீட்டுமக்களையும்  பக்கத்தில்  வைத்துக் கொண்டே  ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்பது தான்.

மனம் நிறைந்து, எழுந்து எழுந்து, வாய் விட்டுச் சிரித்த பார்வையாளர்களின் உடம்பைக் கருதியோ என்னவோ அடுத்துப் பேச அழைத்த பர்வீன் சுல்தானா சிந்திக்க , உணர நிறைய விஷயங்களை முன் வைத்தார்.

'அடங்கிய மனமே குரு ' ,
 'எப்பொழுதுமே தோற்ப்பதற்க்கு தயாராக இருப்பவர்களை யார் ஜெயிக்க முடியும்' ,

போன்ற தெளிவான கருத்துக்களை சிறிது ஆவேசத்ததுடன் அள்ளி வீசினார். பேச்சைக் கேட்கக் கேட்க புரிந்தது அது ஆவேசம் இல்லை , தெரிந்து கொண்ட விடயங்களைத் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் என்று. பேச்சாளரின் பெயரைக் கேட்டு எடை போட்ட நண்பர்களை விவேகானந்தர், சாக்ரடிஸ், மஹா பெரியவர், யேசுநாதர், நபிகளார்  போன்றவர்களின் கருத்துக்களை அனாயாசமாக உரைத்து வெட்கப் பட வைத்தார். அன்னாரின்  உரையில் விளக்கிய 'விஸ்வரூபத்தின்' விளக்கத்தை நான் இது வரை கேட்டதில்லை!

 "கவலை என்ற பறவை என் மேல் பறக்க, நான் கவலைப்  பட மாட்டேன்
 ஆனால் அவை என் மேல் கூடு கட்ட விட மாட்டேன்"

 - என்றுரைத்த போது முண்டாசுக்கவியின் ஆவேசமும், உறுதியும் நினைவுக்கு வந்தது. மக்களை பலத்த சிந்தனையில் ஆழ்த்தி உரத்த கையொலிக்கு நடுவே அமர்ந்த போது , பார்வையாளர்கள் நகைச் சுவையிலிருந்து சிறிது விலகி நின்று , அந்த அம்மையாருக்கு ஆச்சி மனோரமா விருது  கொடுத்ததைக் கூட உள்  வாங்காமல்,  நம்மைச் சுற்றி உள்ள மகான்களும் அவர்களுரைக்கும் மகத்தான சிந்தனைகளிலும் ஆழ்ந்து போயிருந்தார்கள்.

நகைச் சுவை மன்றத்தார் அந்த அரங்கை இந்த நிகழ்ச்சிக்கு கொடுத்த அந்தப் பள்ளியின் முதன்மையாளரை கௌரவப் படுத்திய பிறகு தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த முனைவர்  ஞானசம்பந்தம் ஆழ்ந்த சிந்தனையிலிருந்த மக்களை எழுப்பி தன் கொஞ்சும் தமிழில்  மீண்டும் நகைச்சுவை தீபாவளிக்கு கூட்டிச்சென்றார்.

சரியாக எட்டு மணிக்கு தேசிய கீதத்திற்குப் பிறகு வெளியே வந்த மக்கள் பலரின் மனதிலும் அசை போடப்பட்டிருந்த வரிகள் , கடைசியில் பேசிய முனைவரைச் சாரும்  : " பிரதானமாக ஹிந்துக்களாலே நடத்தப் படும் இந்த நிகழ்ச்சியில் ஒரு முகமதியருக்கு விருது கொடுத்து , தலை சிறந்த ஆன்மிகப் பேச்சாளர் சொல்லின் செல்வம் கைகளால் இந்தக் கல்லூரியின் முதல்வரான ஒரு கிருத்துவருக்கு மேடையில் கௌரப்படுத்தப் படுவதை எண்ணிப் பெருமைப் படுகிறேன் ".

இதை விட மனம் நிறைந்த சுவை வேறு எங்கு கிடைக்கும் ?

வீட்டிற்கு வந்ததும்தான்  பார்த்தேன் அரங்கில் நுழையுமுன், குடிநீர் பாட்டிலையும் தின்பண்டங்களையும் தவிர,  என்னென்னவோ   கையில் திணித்திருந்ததை.

அதில் இவர்களின் 1983 ஆம் ஆண்டுக் கனவாக இருந்தவை:

"நம் கிளப்பிலே 500 அங்கத்தினர் சேர்க்க வேண்டும்.
நாரத கான சபா போன்ற பெரிய அரங்கிலே ஆண்டு விழா நடத்த வேண்டும்
ஆயிரம் பேர் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்
ஒவ்வொருவருக்கும் ஒரு பை நிறைய பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டும்
சிரிக்க வைக்க வேண்டும்
ஒரு நாலு மணி நேரம் அவர்கள் தங்கள்  கவலையை மறந்து ஆரோக்கியமாக சிரிக்க வேண்டும் "

சாதித்துத்தான் இருக்கிறார்கள்!
 மூவரணி,  அமைதியாக இருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை குலுங்க வைத்திருக்கிறார்கள் - வாழ்த்துக்கள்.

மன்றத்தினர் பகிர்ந்த வலைத்தளத்தின் இணைப்பையும் இங்கு பகிர்வதால் நான் அடைவது:  'மகிழ்ச்சி'   !!  https://youtu.be/sWmyx5ZzSlk

No comments:

Post a Comment