Sunday, May 15, 2016

முச்சந்தியில் வாக்காளன்

போன வருடத்திலிருந்தே எதற்கெடுத்தாலும் சொல்ல ஆரம்பித்தார்கள் , அடுத்த வருடம் தேர்தல் என்று.

ஸ்கூல் பையன் போல் பரீட்சை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தது , இப்பொழுது வந்தே  விட்டது.

போன முறை யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பது இப்பொழுது  முக்கியமில்லை; அன்றைய அன்றாடத்  தேவைகளுக்கு யார் சரிப்படுவார்கள் என்று பார்த்துத் தான் செய்திருக்க வேண்டும்.

இது வரை ஆறு அல்லது ஏழு முறை வாக்களித்திருப்பேன் - என் ஒவ்வொரு தேர்வும் சரியா தவறா என்று கூட கணிக்க முடியவில்லை - அவ்வளவு மாற்றங்களா இல்லை என் எதிர்ப்பார்ப்பும் தேர்ந்தெடுத்தவர்களின் குறிக்கோளும் மாறுபடுகின்றதாலா - புரியவில்லை.

இந்த முறையும் , வாக்களிப்பதற்கு ஒரு நாளே உள்ள நிலையில், பிரசாரத்தின் நேரமும் முடிந்த நிலையில் , இதுவரை யாருமே, எந்தக் கட்சியுமே என் போன்றவர்களை மதித்து வாக்குக் கேட்கவில்லை .

என்னுடைய இந்த வரிக்கு ஒரு நல்ல புரிதல் தேவை.

என்னை மதித்து கேட்கவில்லை என்ற கோபத்திலோ , என் வாக்கின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அகம்பாவத்திலோ சொல்லப்பட்டதல்ல அது.

அறுபதுகளில்  மயிலை கீழ மாட வீதியில் நான் வசித்துக் கொண்டிருந்த பொழுது மேள தாளம் சத்தம் கேட்டு ஓடி வந்து வீதியில் பார்த்தால் எந்தக் கட்சி என்று புரியாத வயதானாலும்  இரட்டைக் காளைகளிடையே ஒரு பெரிய மூவண்ணக் கொடி தெரியும். அதன்பின் நீல நிறத்தில் வெள்ளை நட்சத்திர பாட்ஜ் சட்டையில் குத்திக் கொள்ளக் கொடுத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.  வீட்டின் கதவைத் தட்டி கும்பிடு போட்டதும் நினைவில் உள்ளது.

எனது இன்றைய சந்தேகம் ஏன் வீடு தேடி வந்து கெஞ்சவில்லை என்பது அல்ல. என் போன்றவர்கள் அவர்களின் பார்வையில் இருக்கிறோமா இல்லையா என்பதுதான்.

நிற்க .

போன முறை யாருக்கு வாக்களித்திருந்தாலும் , அதனால் என் வாழ்வில் , வாழ்க்கை நடைமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா, என் கஷ்டங்கள் கவனிக்கப் பட்டிருக்கிறதா ? சிந்திக்க வேண்டிய நேரம்.

அப்படி இல்லையென்றாலும் , இந்த முறை தேர்வினால் ஏதேனும் மாற்றம், முன்னேற்றம், தீர்வு வருமா ? எதிர்பார்ப்புகளை எடை போடும் நேரம்

குழப்பம் தான் மிஞ்சுகிறது.

சரி - நாம் தான் பல முக்கிய கட்சிகளின் உழைப்பை, சாதனைகளை கவனிக்கத் தவறி விட்டோம். இவர்களின் இன்றைய  நிலைப்பாட்டை ஊடகங்கள், விவாதங்கள் மூலம் தெரிந்து கொள்ளாம் என்றால் தங்களின் சாதனைகள், செய்ய விருக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலாக மற்றவர்கள் எங்கு தவறினார்கள் என்று சுட்டிக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். வித விதமான தவறுகளை வெவ்வேறு கட்சிகள் செய்வதால் சாதாரணனின் பிரச்சினை தீர்ந்து விடுமா , இல்லை அது தான் ஒரு முடிவெடுக்கவாவது உதவுமா ? மீண்டும் குழப்ப முச்சந்திதான்

அதற்க்காக சுலபமான முடிவாக வாக்குப் போடாமல் என் கடமையிலிருந்து தவறவும் இஷ்டமில்லை. மேலும் என் வாக்கை நானே போட விரும்புவதால் கண்டிப்பாக ஒரு நடை போயே தீர வேண்டும் .

நம் வாழ்வில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ , தேர்தல் பணிகளில் , தேர்தல் முறைகளில்,  கண்காணிப்பில்  நல்ல மாற்றம், முன்னேற்றம்  தெரிகிறது. வீட்டிலிருந்தே நமது வாக்காளர் எண்ணை அனுப்பினால் அதே குறுஞ்செய்தியாக என் வாக்காள விவரங்களும் , எந்த வாக்குச் சாவடி என்றும் சௌகரியமாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் தனது  பிடியை இறுக்கி நியாயத்தை நிலை நாட்டப் பாடு படுவது ஒன்றிலிருந்தே தெரிகிறது , நம் தேசத்தில் இன்னும் ஜனநாயகமாக தேர்தல் நடத்துவதற்கு எல்லா முயற்சிகளும் நடந்து வருகின்றன என்று.

பல எதிர்ப்புகளிலிருந்தும், பண பலத்தை சமாளித்தும், பல்லாயிரம் போட்டியாளர்களையும் அவர்களுக்கு பணி புரிந்து ஆதரவு அளிக்கும் லட்சக் கணக்கான ஆதரவாளர்களையும் எதிர்கொண்டு பாடு படும் இந்த அரசாங்க முயற்ச்சிக்காகவாவது , நாம் ஒரு நடை வாக்குச் சாவடிக்குச்   சென்று  இன்றைய தேதியில் யார் உண்மையாக உழைக்க முயல்பவர் என்று கண்டறிந்து என் வாக்கை அவர்களுக்கு அளித்து, என் சிறிய கடமையையாவது நான் செய்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத் துள்ளேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இந்தியனுக்குள்ளே என்றும் இருக்கும் ஒரு நம்பிக்கை இம்முறையும் தேர்ந்தெடுக்கத் தூண்டுகிறது

முடிவே எடுக்காமல் முச்சந்தியில் நின்று விழிப்பதைவிட ,  ஏதாவது ஒரு முடிவெடுப்பதும் சரியென்றே தோன்றுகிறது.

தவறென்றால் , இருக்கவே இருக்கிறது ,  அடுத்த சந்தர்ப்பத்தில்  திருத்திக் கொள்ளலாம் . 

No comments:

Post a Comment