Saturday, November 28, 2015

நன்றியுடன் ஒரு வெள்ளி

அமெரிக்காவின் பல இடங்கள், சில நாட்களாக, ஒரு கொண்டாட்டம் கலந்த ஜுரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நம்மூரைப் போல் பிள்ளைகள் கல்லூரி முடித்து வேலைக்கும் போய் கல்யாணம் செய்து கொள்ளும் வரை இங்கு பெற்றோர்கள் அடை காப்பதில்லையாம். பள்ளியில் ஒரு அளவு வரை கொண்டு வந்து சேர்த்து விட்டு, இனி மேற்படிப்பு தேவை என்றால் பிள்ளைகளையே பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி விடுகிறார்கள். அவர்களும் அதை ஒரு சவாலாகவே ஏற்று தொடர்வதால் அனேகமாக அனைவருக்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. தானே சம்பாதித்து , தாம் வாங்கிய கடனை அடைக்கும் பிள்ளைகள் தத்தம் வாழ்க்கையை தாமே அமைத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள்.

பணம் , பொறுப்பு, சுய சிந்தனை எல்லாம் சிறு வயதிலேயே வந்து விட மெதுவாக பெற்றோர்களிடமிருந்து விலகியே வாழ்கிறார்கள். இதனால் பெற்றோர்களை தாங்கள் மறந்து விடவில்லை என்பதைத்தான் இந்த நன்றி நவிலும் நாளான நவம்பர் கடைசி வியாழனன்று வெளிப் படுத்துகிறார்களாமாம். அங்கங்கு சிதறிக் கிடக்கும் அண்ணன், தங்கைகள் அனைவருமே இந்த நாளில் தன் பெற்றோர்களிருக்குமிடம் அடைந்து , அவர்களை வணங்கி, ஆசி பெற்று பரிசுகளைப் பரிமாறி  கொண்டாடுகிறார்கள். சரித்திர ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களே நினைவில் தங்கிக் கொண்டிருன்றன என்கின்றனர் பேசிய சிலர்.

ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னமேயே எல்லா பஸ், விமானங்களிலும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நாளின் கொண்டாட்டம் நியூயார்க் நகரின் மையப் பகுதியில் ஒரு பிரதான வீதியில் நடக்கும் ஒரு மிகப் பிரசித்தி பெற்ற ஊர்வலத்துடன் தொடங்குகிறது. இதில் மெக்டொனால்ட் முதல் நியூயார்க் போலீஸ் வரை அனைவரும் கலந்து கொண்டு அணி வகுத்துப் போவதைக் காண இந்த வருடம் பத்து லக்ஷத்துக்கும் மேல் கூட்டம் கூடியதாக ஒரு தகவல். தொலை காட்சியில் வரும் பிரபலங்களுடன் சாண்டா க்ளாஸ்  போன்றவைகளும் அணி வகுத்து வருவதால் குழந்தைகளின் வரவேற்புக்குக் குறைவே இல்லை- இந்த ஊர்வலத்துடன் ஓயாது கூடவே வரும் இசை பெரியவர்களையும் ஆட வைக்கிறது.

நாள் முழுவதும் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்து நிறைவேற, பசிக்கு வான் கோழியின் துணையை தேடிக் கொல்ள்கிறார்கள். இந்த வருடம் சுமார் நாற்பத்து மூன்று லட்சம் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப் பட்ட வான் கோழிகள் இதற்காக உயிர்த் தியாகம் செய்ததாக ஒரு செய்தியும் படித்தேன். வயிறு நிறைய, மறுநாள் மக்கள் கடைகள் பக்கம் பரிசுகள் வாங்க  திரும்பத்  தொடங்க வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு விலையை அதிரடியாகக் குறைக்க எங்கும் திருவிழாக் கோலம் தான். சில பண்டங்களை வாங்க இணைய தளத்திலேயே பதிவு செய்ய முடியும்; அனேகமாக இப்படிப்பட்ட எல்லா பண்டங்களுமே இலவசமாக வீடு தேடி வருகிறது.



சில சமாச்சாரங்கள் சந்தையில் தான் அடி மாடு விலை என்பதால் கடை திறக்கும் போதே வெள்ளம் அலை மோதுகிறது. இங்கு காத்திருந்து, பின் கதவு திறந்தவுடன் ஓடி வரும் கூட்டம் உண்மையிலேயே Door Buster என்ற பதத்தை நியாயப் படுத்துகிறது.

நேற்று எடுத்ததாகச் சொல்லப்பட்ட , மக்களின் ஷாப்பிங் பசியைக் காட்டும் இந்த காணொளிக் காட்சி பிரமிக்க வைக்கிறது : https://youtu.be/SA5P4MsNGfI

ஜே சி பென்னி போன்ற பிரபலமான சில கடைகளில் அதிகக் கூட்டத்தில் கேட்ட குரல்கள்:
' மாப்பிள்ள , ஒரு மணி நேரமா கியூவே நகரல்லே '
'பசிக்குதுன்னா இப்ப என்னம்மா பண்றது, லைன விட்டு போக முடியாதே'
'ஏமண்டி , இக்கட....."  - - - - - போன்றவைகள் உண்மையிலேயே கேட்ட சில குரல்கள்

ஐம்பது இன்ச் டிவியைக் கூட வாங்கிக் கொண்டு தானே அதைத் தூக்கிக் கொண்டும் ஒருவர் பஸ்ஸில் போகிறார், அவர்களே வீட்டில் போய் பொருத்தியும் கொள்ளுவார்களாம். இங்கு இதைத் தூக்கிக் கொண்டு போக வண்டியோ, ஆட்களோ கிடையாது.

 ஒரு கடையின் வாசலில்  குவித்து  வைத்திருந்த மலை போன்ற சாமான்களைப் பார்த்து, எனக்கு வீட்டுக்கு வந்து கூட வெகு நேரம் தூக்கமே வரவில்லை - இதை எப்படி எடுத்துப் போகப் போகிறார்கள் என்று நினைத்து!

எல்லா பொருள்களுக்குமே கணிசமான தள்ளுபடி இருந்தாலும் அதற்க்கு பில் போட்டு பணம் கொடுப்பதற்க்குள் நாக்கு தள்ளி விடுகிறது. இவ்வளவு வியாபாரம் நடக்கும் இந்தக் கடைகளில் எனக்கென்னவோ வாடிக்கையாளர்களை இன்னும் சீக்கிரமாக அனுப்ப அவர்கள் வழி செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு காலத்தில் ஆங்கில வருட முதல் தேதியில் நம்மூரில் விவேக் போன்றவர்கள் இப்படிப் பட்ட 'அள்ளிக் கொள்ளுங்கள், அதிரடி விலையில்' போன்ற சந்தைகளில் நிமிஷமாக பில் போட்டு பார்சல் பண்ணி விடுவார்கள். இங்கு மால்களிலும், ஷாப் ரைட், காஸ்ட்கோ  போன்ற மகா சந்தைகளும் கூட பில் போடும் கௌண்டர்கள் மிகக் குறைவு. வாடிக்கையாளர்களின் பொறுமையை இப்படிச் சோதிக்கக் கூடாது.

ஆனால் இன்றைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டது போல் கோடிக்கணக்கான பொது ஜனங்கள் 4500 இணைய தளங்கள் வழியாகவும் , நேரிலும் வந்தும் கடைகள் திறக்கும் பொழுதே உள்ளே விரைந்து   'என்ன நடந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வாங்கியே தீருவேன்' என்ற முடிவுடன் இருப்பதாலும் , 1200 கோடி டாலர்கள் வியாபாரம் நடப்பதாலும், இதைக் கறுப்பு வெள்ளி என்று சொன்னாலும் வியாபாரிகளுக்கு என்னவோ சுபீக்ஷ வெள்ளியாகத் தான் இருக்கிறது !   

2 comments:

  1. "Nice article...informative ..I too am wondering how the guys carry all the heavy items and fix them....
    one advantage we have in india is , cheap labour...." said Raghothaman Rao on 28-Nov-2015

    ReplyDelete
  2. "நல்ல பதிவு. வளர்க உங்கள் எழுத்துத் திறன்" said Bharat Kumar on 28-Nov-2015

    ReplyDelete