Thursday, September 24, 2015

விழிக்குமா வங்கிகள் ?

சமீபத்தில் ஒரு விசேஷத்துக்கு போன உறவினர் வீட்டில் சாப்பாடு முடிந்தவுடன் வெற்றிலை பாக்கு போடும் இடத்தில் பேசிக் கொண்டிருந்த பொழுது அந்த விசேஷத்துக்கு வந்திருந்த சில அந்தணர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள்- அதில் பாதிப் பேர் எழுபதைத் தொட்டிருப்பார்கள். திடீரென்று ஒரு வயதானவர் ' நீங்க வங்கிலயா வேலை பார்த்தேள்' என்று கேட்டு விட்டு எந்த வங்கி என்றும் கேட்டார். சொன்ன பதிலுக்குக் கூட காத்திராமல் மடை திறந்தால் போல் கொட்ட ஆரம்பித்தார்:

 ' இப்பல்லாம் ஒண்ணும் சரியில்லை. பாங்குக்குக்குள்ள நுழஞ்சதும் முன்ன மாதிரி சிரிக்க வேண்டாம், ஆனா ஏன் வந்தேங்கற மாதிரி  பாக்கரா'.

'கம்ப்யூட்டர் தான் வந்துடுத்தேன்னு பார்த்தா- இன்னும் லேட்டாறது. கோணா மூணான்னு பாஸ்புக்ல என்ட்ரி போட்றா'

' போதாக் குறைக்கு அப்பப்போ கம்ப்யூடர் வேல செய்யலன்னு திருப்பி அனுப்பிசுடறா. ஆத்திர அவசரத்துக்கு நம்பி போக முடியல . முன்னெல்லாம் நிறைய பேர் இருப்பா. இப்பல்லாம் எண்ணினாப் போல தான் இருக்கா. ஏன் இப்பல்லாம் ஆளே எடுக்கறதே இல்லையா" என்றார்.

இன்னும் ஒரு முதிர்ந்தவர் ' என் கணக்குலேர்ந்து மாசா மாசம் ஒரு அம்பதோ, நூறோ எடுத்துண்டே இருந்தா- என்னன்னு கேட்டா செக் புக் சார்ஜுன்னு சொன்னா. நான் இத்தனை வருஷமா செக்கு  வாங்கினதே இல்லயேன்னு சொன்னதும் , இனிமே எடுக்காம பாத்துக்கறேன். ஆனா இதுவரைக்கும் புடிச்சதை ஒண்ணும் பண்ண முடியாது'ன்னுட்டா.

வந்துதே கோபம் , மானேஜர் ரூமுக்குப் போய், என் மருமான் ரிஜர்வ் பாங்கில பெரிய இடத்துலதான் இருக்கான், நான் அவனண்ட சொல்ரேன்னு அவன் பேரையும் சொன்னப்புறம், மறுநாளே அந்தப் பணம் அக்கௌண்ட்ல திரும்பி வந்துடுத்து" என்றார்

நான் கிளம்பும்போது அவர் கேட்ட கேள்வி செவிட்டில் அறைந்து சிந்திக்க வைத்தது " டெப்பாஸிட் வரலேன்னா இப்படியெல்லாம் பண்றாளே இப்பெல்லாம். பாங்கு அவ்வளவு மோசமாவா இருக்கு? என்ன மாதிரி எத்தன பேருக்கு மருமான்கள்  வங்கிகள் பயப்படும் இடத்தில் இருக்கா? அப்ப அவர்கள் கிட்டேந்து இப்படித் தப்பு தப்பா புடிக்கறதெல்லாம்  அவ்வளவு தானா? எதற்க்கு இப்படி ஏமாத்தி பொழைக்கணும்"னு பொறிந்து தள்ளி விட்டார்.

ஒரு கஸ்டமர் மீட்டிங்கில் இருந்தது போல் போல் தெரிந்தாலும்  அது ஒரு சாதாரண மனிதனின் உண்மையான குமுறலாய்ப் பட்டது. 'அதுக்கப்புறம் அக்கௌண்டை க்ளோஸ் பண்ணி வேற தனியார் பாங்குக்கு மாத்திட்டேன்' என்றவுடன், புரிந்தது, பொதுத் துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஏன், எப்படித்  தள்ளி போய்க் கொண்டிருக்கிறது என்று.

வந்த கம்ப்யூடர் எல்லாம் ஊழியர்களைத் தாண்டி வாடிக்கையாளர்களைத் தொடவே இல்லையா, இல்லை தொட்டது போதவில்லையா?

படித்த வாடிக்கையாளர்களுக்குக் கம்ப்யூடர் மூலம் வந்த நன்மைகள் எல்லாம் இப்படிப்பட்ட பாமர மக்களுக்கு போய்ச் சேரவே இல்லையா ?

இவை எல்லாம், என் கண் முன்னே நடந்த -கொஞ்சமும் கற்பனையோ பொய்யோ இல்லாத உண்மைச் சம்பாஷணைகள் என்பதால் அந்தக் கோப வார்த்தைகளின் தாக்கம் அதிக நேரம் என்னுள்ளே இருந்தது. முன்பெல்லாம் இருந்த ஆனால் இப்பொழுது கிடைக்காத அன்பான வரவேற்பு, வங்கிகள் சரியாகப் போகவில்லை என்ற வதந்திகள், வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து தவறான முறையில் பணத்தைக் கறக்கிறார்கள் என்றெல்லாம் எண்ண வைத்திருக்கிறது. அவ்வளவு வயதானவர்கள் பொய் சொல்வதற்கு எந்தத் தேவையுமில்லை என்றே தோன்றியது. ஏதோ சொல்வதற்க்கு இடமில்லை, கேட்பதற்க்கு ஆளும் இல்லையாததால் கிடைத்த சந்தர்பத்தில் கொட்டி விட்டுப் போகிறார்கள் போலும்!

க்ளாஸ் பாங்கிங்கில் இருந்து மாஸ் பாங்கிங் போவதாகச் சொன்ன இந்த வங்கிகள் இப்பொழுது தங்கள் மேல் அதே மாஸ் இவ்வளவு  மாசு கற்பிக்கும் அளவிற்க்கு விட்டதற்க்கு யார் காரணம் என்று எண்ணிப் பார்க்கிறார்களா?

மாஸ் பாங்கிங்குக்கு கிளாஸ் தேவையில்லை என்று யார் முடிவெடுத்தது ?

ஹை க்ளாஸ் மக்கள் வங்கிகளைக் கடனுக்கு மட்டுமே அண்டி பின் 'வாராக் கடன்' என்ற செல்லக் குழந்தையை விட்டுச் செல்கின்றன.  ஆனால் எதுவுமே அதிகம் அறியாத , அதிக எதிர்பார்ப்பு இல்லாத இப்படிப்பட்ட 'மாஸ்' தான் வங்கிகளின் ஆணி வேர் என்பதை எப்பொழுது பொதுத்துறை வங்கிகள் உணரப் போகின்றன?

வங்கி நிர்வாகங்கள் வாராக் கடனுக்கு  மட்டும் ஊழியர்களை பயமுறுத்தாமல், இந்தப் பக்கத்தையும் கவனிப்பதும், வாராக் கடன் என்பது வங்கிகள் தெரிந்தோ, தெரியாமலோ, எந்த அழுத்தத்தினாலோ கொடுத்து செய்த தவறுகள். ஆனால்  வங்கிகள் தேற, கரையேற இப்படிப்பட்ட சாதாரண மக்கள் இன்னும் முக்கியம் - உணருமா?

பெரும்பொழுதில் தூங்கிக் கொண்டே இருந்து ஆனால்   எழுந்திருக்கும் கொஞ்ச நேரத்தில் மக்களுக்கு நன்மை அளிக்கும் வாஸ்து புருஷன் போல , வங்கிகள் விழிக்குமா, விழித்தாலும் உதவுமா? சாதாரணர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!

8 comments:

  1. "It is basically attributable to the lack of training in dealing with humans. Added to that is their complacency on account of the security of job" _ Mrs Neela Venkataraman on 24-Sep-2015

    ReplyDelete
  2. "The PSU Bank Staff & Managers want to get Good Secured Employment.... Govt, wants it as Voting Device & to pass-on Public/govt. Money to Corporate..! Unfortunate the Customers/ Govt. Pensioners have come to THIS-SIDE of the Counters...now... Angry..repentant ...? Slowly all PSU banks will be merged...for shortage of Cusomers...Funds...Employees...etc...It will be too late to stop the slide...." - Mr Sundaravaradan on 24-Sep-2015

    ReplyDelete
  3. "Yes. It is true. They make unwarranted debit. Even if mail is sent for reversal, it is not being attended to. Only when we go in person with a written request, the reversal of unwarranted debit is being considered" - Mr Chandrasekar Subramaniam commented on 24-Sep-2015

    ReplyDelete
  4. "தங்கள் பதிவைக் கண்ணுற்றேன் . நன்றி நண்பரே " - Mr Azhagappa Raju on 24-Sep-2015

    ReplyDelete
  5. "மிகவும் பயனுள்ள கருத்து பரிமாற்றங்கள். போய்ச் சேர வேண்டிய காதுகளுக்கு எட்டினால் சரி" - Mr P.V.Padmanabhan - 24-Sep-2015

    ReplyDelete
  6. "GUD. you hve rightly said the truth.Nothing but the truth......." - Mr Raghothaman Rao - 25-Sep-2015

    ReplyDelete
  7. "சிந்திக்க வைக்கிறது கபாலி. ...." - Mr Bharath Kumar on 25-Sep-2015

    ReplyDelete
  8. "Super article. Pls send this to news papers." - Wrote Panchatcharam Radhakrishnan on 26-Sep-2015

    ReplyDelete