Sunday, May 24, 2015

யாருக்குச் சொந்தம்?

காலை பக்திமயமான கதைகளை கேட்டு சிறிது தெளிந்த மனத்தில் இருக்கும் பொழுது தொடர்வது சென்னையைச் சுற்றியுள்ள நிலங்களும் அதை எவ்வளவு மலிவாக இன்றே வாங்கலாம் என்ற காட்டுக் கத்தலும்தான். முதலில் சென்னைக்கு அருகே "ஒரு மனை நான்கு லட்ச ரூபாய்தான்" என்றார்கள். கடைவாயைத் துடைத்துக் கொண்டே திரும்பவும் பார்த்தால் 600 சதுர அடி மனை நாலு லட்சம்" என்றார்கள். ஆஹா ! விளம்பரத்திலேயே தொடங்குறாங்க வில்லங்கத்தை.

மனிதனின் அபார புத்தியை நினைத்தால் வியப்பாகத் தான் இருக்கு. ஏதோ படம் வரைவது போல் காற்றில் கோடுகளைப் போட்டு இது வரவேற்பறை, இது சமையலறை என்று அழகாகக் கூறு போட்டுவிட்டான். இந்த வான்வெளியில் இடையிடையே  மரச்சட்டங்களை நட்டு  அதைக் கதவு என்றழைத்து அவரவர்களின் எல்லையையும் நிர்ணயித்தும் விட்டான்.

 நில உரிமை விஷயம் கொஞ்சம் விவகாரமாகத் தான் இருக்கு.  நான் நிலம் வாங்குவதற்க்கு முன், ரொம்ப ஜாக்கிரதையாக வக்கீல் பார்த்துச் சொன்னார் " எல்லா டாக்குமென்ட்ஸையும் பாத்துட்டேன். ஒரு வில்லங்கமும் இல்லை. 13 வருஷம்  இல்லை 25 வருஷ வில்லங்கப்பத்திரம் இருக்கு. பட்டா, அடங்கல் எல்லாம் ஸ்ப்ஜாடாப் பாத்துட்டேன். தைரியமா வாங்கலாம்".  நியாயப் படி, சட்டப்படி எல்லாம் சரியாத்தான் இருக்கு.

ஆனால், அந்த 25 வருஷம் முன்னாடி  நிலத்தை யார் வெச்சுண்டிருந்தா, யாருக்கு வித்தா? இப்படியே பின்னோக்கிப் போனா, முதன் முதல் இந்த நிலத்தை யார் வெச்சுண்டிருந்தா, அவருக்கு யார் அதை விற்றது?? இதன் ஆரம்பம் என்ன?? யாருக்காவது தெரியுமா? கொஞ்சம் பிரபல நகைச்சுவை கேள்வியின் வாடை அடிப்பதைத் தாண்டி சிந்திக்க வேண்டி இருக்கிறது. இப்படியாக காற்றில் வரைந்து, நிலத்தைக் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கூறே போடாமலும் மொத்த விற்பனையாகவும் செய்கிறார்கள் என்று நம்ப வைப்பது சமீபத்தில் வந்த ஒரு செய்தி "மதுரையில் ஒரு கிரானைட் மலை காணவில்லை"

எதற்கு இவ்வளவு சிரமம்-  மலையைத் தோண்டியோ அல்லது நிலத்தை சுரண்டியோ பங்கு போடுவதை விட மிகச் சுலபமாக மேலோட்டமாக உள்ளதை அள்ளி விற்பதுதான் மணல் கொள்ளை போலும்.

இப்பவே சென்னை நிறைந்து செங்கல்பட்டு தாண்டி திண்டிவனம், மைலம் முருகன் கோவிலுக்கருகில் என்ற விளம்பரங்களைக் காண முடிகிறது. கொஞ்ச வருஷத்துக்குப் பின் சென்னை- கன்யாகுமரி பாதையில் உள்ள நிலங்கள் வாங்கப் பட்டு விட்டால், அதற்க்குப் பிறகு வரும் நம் பேரக் குழந்தைகள் எங்கு வீடு கட்டுவது? வங்கிகள் யாருக்கு வீட்டுக் கடன் கொடுப்பார்கள்?

இப்படியாக பல ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் இந்தியாவைக் கூறு போட்ட முதல் பங்கில் வந்தது தான் இன்றைய மாநிலங்கள் போல. இதில் தத்தம் மாநிலத்தில் ஓடும் நதிகளை தனக்குத் தான் என்று சொந்தம் கொண்டாடி இன்னொரு நீர் வியாபாரமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இதே நிலையில் போனால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் நம் சண்டைகள் இங்கிருந்து விண்ணுக்குத் தாவவும் வாய்ப்பிருக்கிறது போல் தெரிகிறது. சந்திரனிலும், செவ்வாயிலும் முன் போகும் நாட்டவர்கள் அவரவர்கள் கொடியை நட்டு சொந்தம் கொண்டாடத் துவங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் 
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான்  நிலம் தனைப் படைத்தான்

No comments:

Post a Comment