Friday, November 1, 2013

புஸ்ஸாகும் தீபாவளி

எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து, ஒரு வருஷத்தின் பெரிய பண்டிகையே தீபாவளிதான். ஒரு மாசத்துக்கு முன்னாடியே பட்டாசு லிஸ்ட் போட ஆரம்பித்து, ஒரு க்ளயன்டுக்கு அனுப்பும் ரிபோர்ட் போல் பல முறை ரெவியூ பண்ணி, பின் அப்பா அனுமதிப்பதென்னவோ பத்து ரூபாய் தான்- ஆனால் அதில் கிடைக்கும் கை/பை நிறைய பட்டாசுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

வழக்கமாக நவராத்ரி லீவில் மைலாப்பூரிலேயே உள்ள ஒரு கடையில் துணி வாங்கி, தேரடி பக்கத்தில் உள்ள பாபு ராவிடம் கொடுத்தால் அவர் தீபாவளிக்கு இரண்டு நாள் முன் பேண்ட் என்ற பேரில் ஒரு பாவாடை தைத்துக் கொடுத்தாலும், முகம் கோணாமல் சந்தோஷமாக உடுத்துவோம்.

தீபாவளிக்கு முந்தைய இரவு தூங்கவே மாட்டோம். அண்ணா, அக்காக்களுடன் குளிருக்கு (ஆம் அப்பல்லாம் நவம்பரில் குளிர் உண்டு- இந்த மாதிரி வெய்யில் கிடையாது) போத்திக் கொண்டு மறு நாள் வெடிக்கப்போவதை மனசுக்குள்ளேயே ரிஹர்ஸல் பண்ணுவோம்.

காலை ரெண்டு மணிக்கு அரக்கப் பரக்க எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து (அப்படின்னா?), எல்லா பட்டாசையும் கரியாக்கிய பின் தான் வீட்டுக்குள்ளே வருவோம். இதற்க்கு நடுவில் வாசலில் நாதஸ்வரம், மேளக்காரர்கள் வந்து மங்கள வாத்யம் வாசிப்பார்கள். அதற்க்குப்பின், இட்லி, பஜ்ஜி சாப்பிட்டு விட்டு தெரிந்த சொந்தக்காராள் வீட்டுக்கெல்லாம் போய்ட்டு ஒரு மணிக்குத் திரும்பும் போது நல்ல பசி இருக்கும்.

காலைப் புகை இந்நேரம் நல்ல தொண்டை எரிச்சல் ஏற்ப்படுத்தி இருந்தாலும், மிச்ச சொச்ச சரங்களை ஒவ்வொன்றாக உதிர்த்து வெடித்து  இரவு சொக்கப் பனை முடியும் பொழுது, துக்கம் தொண்டைய அடைக்கும்- தீபாவளி முடிந்ததுக்கா இல்லை மறுநாள் ஸ்கூலுக்கா என்று தெரியாது. சில சமயங்களில் அன்று இரவு ஒரு நைட் ஷோவுடந்தான் தீபாவளி முடியும்.

இப்பல்லாம் இதில் ஒன்றுமே கிடையாது- இன்று காலை ஐந்து மணிக்கு ஒரு பட்டாசு சத்தம் கூட கேக்கல்ல. ஏன் இப்படி நம் பாரம்பரியப் பண்டிகைகள் களை இழந்து போகின்றன?

முதல் காரணம் ஆபீஸ்.  தீபாவளிக்கு ஒரே நாள் தான் லீவு. பாதி பசங்க வெளியூர்லேந்து டிக்கட் வாங்கர தொந்தரவுக்காகவே ஊருக்கு வருவதில்லை. மேற்கு வங்காளத்தில் பூஜாவுக்கு 4 , 5 நாள் லீவு விடறாங்க. வெளிநாடுகளில் க்ரிஸ்மஸுக்கு 15 நாள் முன்னமேயே மெயில் பக்கம் போகவே மாட்டேங்கராங்க. ரம்ஜான்போது அரபு நாடுகள் எல்லாமே தொழில்களை முடக்கி தத்தம் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றன.

 நம்ம தீபாவளி, பொங்கலைத் தான் யாரும் மதிப்பதில்லை போலிருக்கு. நம்ம ஊர் பசங்கதான் சொல்லணும் இந்த நாள்லெல்லாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆபிஸ் வரமாட்டேன்னு. ஒண்ணும் குடி முழுகி விடாது, இந்தப் பண்டிகை கொண்டாடாதவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கொஞ்சம் முன்யோசனை தான் தேவை அது இருந்தால் சமாளிக்கலாம்.

என்னமோ இந்தப் பட்டாசினால் தான் மாசு கெட்டுப் போயிடுவது போல ஒரு கும்பல் கிளம்பிடுது. நாம் ரோட்டில் போடும் பேப்பர்களும், ப்ளாஸ்டிக்குகளும் மறந்து விடுகின்றன.

 இந்த சத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். ஏன் நம்ம ஊரில் வாகனங்கள் போடதா சத்தமா, விடாத புகையா. இதற்க்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் வேற.

இப்பல்லாம் கார்த்தால 5 மணிக்கு எழுப்பினாலே பசங்க ஏன் இவ்வளவு சீக்கிரம்னு திட்றாக. எழுந்ததுக்கப்புறம் முகனூல்ல வாழ்த்துக்கள். அதுக்கப்புறம் லேகியம் உண்டோ இல்லையோ, பட்டி மண்டபம் உண்டு. அதுக்குப்பின்னால் அப்படியே உட்கார்ந்த படியே டீ வீல படம் , படம் , படம் தான். போதாததுக்கு கிரிக்கெட் மாட்ச் இருந்தா கேக்கவே வேணாம்- நாளைக்குக் கார்த்தால மூடு இன்று மாட்ச் ரிசல்ட் பொறுத்துத் தான்.

இக்கால இளசுகளே- விழித்துக் கொள்ளுங்கள். நம் பாரம்பரிய பண்டிகைகளை முறைப்படி, அமைதியாக, சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்- எதற்க்காகவும் இவற்றை விட்டுக் கொடுக்காதீர்கள். பண்டிகை நாட்களில் லேப்டாப்பைத் திறக்காதீர்கள். டீ வீ போடாதீர்கள். குடும்பத்தாருடன் நிறைய பேசுங்கள். உறவினர் வீட்டுக்குச் செல்லுங்கள்.  நம் நாட்டில் சுதந்திரத்திலிருந்து, சம்பள உயர்வு  வரை எதுவுமே போராடமால் கிடைக்கவில்லை. இதற்க்கெல்லாம் அமைதியாக, அற வழியில் போராடுங்கள். அப்பத்தான் உங்க பிள்ளைகளுக்கும் இவையெல்லாம் மறக்காமல் இருக்கும்.

 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்




  

No comments:

Post a Comment