Friday, November 2, 2012

நீலம் புயலுடன் ஒரு பயணம்


வெகு நாளாகவே கும்பகோணம் அருகே உள்ள கோவில்களுக்கு, கா(ர்)ல் போன போக்கில் போக வேண்டும் என்று ஒரு ஆசை. அதனால் ஒரு மாசம் முன்னாடி டிக்கட் ரிசெர்வ் பண்ணும் போது எதையுமே எதிர் பார்க்காமல் அக்டோபர் 29க்கு சோழன் எக்ஸ்ப்ரசில் ஐந்து பேர் தயாராகி விட்டோம். கிளம்பும் முதல் நாளிலிருந்து வானமும், டீவீ யில் ரமணனும் பயமுறுத்தத் தொடங்கினார்கள். நான் இதைப்போல நிறைய மழை, புயல்களைப் பார்த்ததால் புத்தர் போல் இருந்தேன். என் மன்னியோ, நான் டிக்கட்டை ரத்து செய்வதை பார்ப்பதற்க்கு தயாராக இருந்தாள்.

கிளம்பற தினம் வானம் சும்மாவானும் சில உறுமல்களும், பல பஞ்சுப் பொதிகைகளுமாக பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் போகப் போக மழை இல்லாமல் ப்ரமாதமான அனுபவம் கிட்டியது. அதே சந்தோஷத்தில் , சாயந்திரம் ஆதி கும்பேஸ்வரன் அன்னாபிஷேகத்தையும், மங்களாம்பிகையையும் தரிசித்து, ஒரிரு தோசைகளுடன் அந்த 
நாளை இனிதே முடித்துக் கொண்டோம்.

மறுநாள் சூரியனார் கோவில் போகும் போதே தொடங்கிய மழை , கஞ்சனூர் சுக்ரனுடன் கூடவே வந்து, வைத்தீஸ்வரன் கோவிலில் நான் தரிசனம் செய்யும் பொழுது, ஊரை புரட்டிப் போட்டது. விடாது தொடர்ந்து திருவெண்காடு புதஸ்தலத்திலும் ஃபோட்டோ எடுக்க விடாமல் படுத்தியது. நாங்கள் சென்ற கீழ்பெரும்பள்ளம் மற்றும் திருக்கடையூரில் துணைக்கு நின்ற மழை, திருநள்ளாரில் சனீஸ்வரைக் கண்டவுடன் என்ன குஷியோ அப்படி ஒரு பேயாட்டம் போட்டது.  இந்த நேரத்தில் எங்களுக்கு மழையுடன் ஒரு பரிச்சயம் ஏற்ப்பட்டு, அது இல்லாவிட்டால் எங்களுக்குத் தனிமை தெரிய ஆரம்பித்து. இந்த உற்ச்சாகத்தில், கூத்தனுர் சரஸ்வதியையும் பார்த்தோம். வாசல் கடைகளில் நிறைய பேனா, நோட்டுப் புஸ்தகங்கள்- கடைக்காரர் சொன்னது "ஜனவரி ஆரம்பிச்சால் போதும், எல்லாரும் ஹால் டிக்கட்டோட வந்துருவாங்க" . அதற்க்குப்பின் திருமெய்ச்சூர் லலிதா சஹ்ஸ்ரநாம கோவிலையும் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பியபின், என்ன அதிசயம்- ஒரு சொட்டு மழை கூட இல்லை. இன்னுமொரு அனுபவம் என்னான்னா, நாங்கள் காரில் போகும்போது இல்லாத மழை, காரை விட்டுக் கோவிலுக்குள் போகும்போது வந்து விடும். இதனால் எல்லா கோவில்களுக்கும் நாங்களும் கடவுள் போல குடையுடன் தான் போனோம்!

விடிய விடிய மழை பெய்தாலும், விடாமல் வானிலை அறிக்கை பயமுறுத்தினாலும், மறுநாள் எல்லோருக்கும் ஒரு அரிய வைராக்யம் வந்து விட்டது- மற்ற கோவில்களையும் பார்த்தே விடுவது என்று. சூடான பொங்கலும், ஒரு கும்பகோணம் டிகிரி காபிக்குப் பிறகு, கொட்டும் மழையில் திங்களூரை நோக்கிப் பயணப்பட்டோம். மணல் அள்ளும் நூற்றுக்கணக்கான லாரிகள் வழியில் பொறுமையை சோதித்து நேர விரயம் செய்தது. ஒரு சூப்பர் மழையின் நடுவே, சந்திர தரிசனம். அதே கொட்டும் மழையிலும் ஒரு அருமையான ஆலங்குடி குரு சந்திப்பு. ஆம்- பெரிய கோவில் - தமிழகத்துக்கே உரிய கரண்ட் இல்லாத இருட்டு- அழகிய ஆலங்குடி குரு பகவானின் தரிசனம் எண்ணை விளக்குகளுக்கிடையே. திரும்பி வரும் வழியில் ஒரு எதிர்பாராத கோவில்- வலங்கைமான் ' பாடை கட்டி ' மாரியம்மன்.

 ஒரு நல்ல சாப்பாட்டுக்கப்புறம் கோவிந்தபுரம் புதிய கோவில் - அழகிய இடமாக இருந்தாலும் ஏனோ மனதில் நிற்க்கவில்லை- கொஞ்சம் காமராஜர் அரங்கம் போலிருந்தது. அதற்க்கப்புறம் பார்த்த அதிஷ்டானம் தான் நான் எதிர் பார்த்தது போல- அருமையான சூழ்நிலை. தொடர்ந்து 'ஐயாவாடி' என்று அழைக்கப் படும் "ஐய்வர் பாடி" - அங்குள்ள ப்ரத்யங்கரா தேவி மிகுந்த சக்தியுடையவர் என்றும், பல ப்ரபலங்கள் அங்கு வந்துள்ளதாகவும் சொன்னார்கள். சன்னதியிலுள்ள கூரைகள் முழுக்க உத்ராக்ஷங்கள். ஆதலால் கர்பூர தீபாரதனைகள் தவிர்க்கப் படுவது சிந்திக்க வைத்தது.

அதற்க்கப்புறம் கிடைத்தது ஒரு மறக்க முடியாத சந்திப்பு. ஆம் - உப்பிலியப்பனும் நானும். இந்தக் கோவிலை திருப்பதிக்கு இணையாகச் சொல்வார்கள். ஏழுமலையானுடன் தனியாக ஒரு பத்து நிமிடம் - நம்பும்படியாக இருக்காது. ஆனால் நடந்தது அதுதான். விடா மழையுடன் கடைசியாக ராகுஸ்தலமான திருநாகேஸ்வரம், முடித்து ஹோட்டல் திரும்பியதும் ஒரு சொட்டு மழை கூட இல்லை. என்னுடன் வந்தவர் "ஆண்டவன் நம் பொறுமையை எப்படிச் சோதித்திருக்கிறார்" என்று சொன்னது உண்மையோ என்று சிந்திக்க வைத்தது.

சில நினைவுகள் சில சிந்தனைகள், சில வேதனைகள்:
  1. விழுப்புரம் ஸ்டேஷனில், 20 ரூபாய் என்று அச்சடித்த சாப்பாட்டு பொட்டலத்தை 24 ரூபாய்க்கு விற்றதும்,  என் அண்ணா உடனே ரெய்ல்வேக்கு எஸ். எம். எஸ்  கொடுத்து பதில் வாங்கியது.
  2. நிறைய இடங்களில் மழையில் மூழ்கிய பயிர்கள்
  3. எங்கும் பச்சை
  4. குப்பை, குப்பை - மூட்டை மூட்டையாக குப்பை எல்லா கோவில் அருகிலும்
  5. கும்பகோணச் சந்தையில் பச்சைக் கறிகாய்கள்
  6. குடந்தை டிகிரி காபி
  7. கும்பகோணத்தவர்களின் உபசரிப்பு.
  8. ஹோட்டலில் க்ரெடிட் கார்ட் என்றவுடன் கடைசியில் பே பண்ணினால் போதும் என்றது - இன்னும் வியாபாரம் கெடவில்லை
  9. ஸ்டேஷனில் கொடுக்கும் டபரா, டம்ளர் காபி
  10. அருமையான ரயில் பயணம்
  11. வழியில் பார்த்த உண்மையான பாரதி ராஜாத்தன கிராமங்கள்
நாங்கள் சென்னை வந்ததும் முதலில் கவனித்து- எங்கும் எங்களைத் துரத்திய மழை இங்கு இன்று ஒரு பொட்டு  கூட இல்லை. அடுத்த டூருக்கு மனம் ஆசைப்பட்டது

6 comments:

  1. Felt I travelled along with you. Could 'see' the rain, get 'drenched' in it and have a 'darshan' of all the Gods. I re-visited all the temples now with you. Excellent reporting. Reminiscent of a mix of Sujatha and Idhayam Pesugirathu Manian

    ReplyDelete
  2. Vijayalakshmi.CS@cognizant.com commented on 05-Nov-2012:

    Beautiful narration of events. I was able to visualize every scene.. thanks a lot for sharing, Sir

    ReplyDelete
  3. Sudha Sundararaman commented on 02-Nov-2012:

    Enna oru nadai , Kapalee!!! Konnuttenga Ponga!
    Novel edavadu ezhuda arambichirukkengala?

    ReplyDelete
  4. natarajan_tm@yahoo.co.uk commented on 02-Nov-2012:

    Super Sir.. After your write up I feel like making a trip to Kumbakonam.

    You have wonderful artucltaion skill .. Looking forward more

    ReplyDelete
  5. Sivasankar Babu commented on 02-Nov-2012:
    Seems to have enjoyed a lot . put a map of this . I can try similar one when next cyclone forms.

    ReplyDelete