Showing posts with label SJT. Show all posts
Showing posts with label SJT. Show all posts

Sunday, January 7, 2018

இடது பதம் தூக்கி ....



போன வருடம் ,  2017ம் ஆண்டு, நவ கைலாயத்தில் தொடங்கி , நவ திருப்பதிகளையும் வலம் வந்து பின் வாரணாசி , மஹாகாலேஷ்வர் , ஓம்காரேஷ்வர் ஆகிய  ஜோதிர்லிங்க ஸ்தல விஜயங்களிலிருந்து இன்னும் மீளாத நினைவுகளூடே , புதிய  2018 ஆண்டை ஆருத்ரா தரிசன சிறப்பு சுற்றுலாவுடன் கிளம்பியது வரப்போகும் பொங்கலை முன்கூட்டியே வரவழைத்து  கரும்பைச் சுவைத்தது போல் இனிக்க,  புத்தாண்டு தினத்திலேயே பயணப்பட்டு மறுநாள் அதிகாலையில்  இராமேஸ்வரத்தில் வந்திறங்கியது ஒரு சிறிய குழு.

நாள்-2 (02-Jan-2018)

புதிய ஆண்டின் முதலிலேயே கிடைக்கவிருக்கும் தரிசனங்களை நினைத்து மனம் குதூகலித்தாலும் நடந்த விஷயங்களோ கொஞ்சம் தயங்க, கலங்க வைத்தது.  வழக்கமாக கிடைக்கும் பிரத்யேக அறை கிடைப்பதில் இருந்த சிரமம்,  கிடைத்த இடத்திலும் சரியாக வெந்நீர் கிடைக்காமல் ,  கொடுக்கப்பட்ட அறையிலும்  மின்சாரம் துண்டிக்கப்பட , கொஞ்சம் தொண்டை தண்ணீரை செலவிட்டபின் சோழிகள் சரியான கட்டங்களில் விழ - ஒரு புதிய அனுபவமாகத் தான் தொடங்கியது ஆண்டின் முதல் சுற்றுலா .

Rameswaram Agni Theertham
இருந்தும் பயணங்களில் இதெல்லாம் சகஜம் - ஓஹோ இதுதான் பயணத்தால் கிடைக்கும் அனுபவங்களோ என்று மனதை தேற்றிக் கொண்டு சிறிது அதிகமான பரபரப்புடன் காணப்பட்ட இராமேஸ்வரத்தின் கடலில் அக்னி தீர்த்த குளியலுடன் தொடங்கிய நிகழ்ச்சிகள் விறுவிறென்று திரும்பி பார்ப்பதற்குள் 22 தீர்த்த ஸ்நானங்களுடன் முடிவடைந்திருந்தது !

Rameswaram
எவ்வளவு கூட்டமிருந்தாலும் தேர்ந்தெடுத்த சரியான வழிகாட்டிகளால் துரித வழிகள் காட்டப்பட்டு, பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்பட,  ஸ்நானங்கள் முடிந்த குறைந்த நேரத்திலேயே ஒரு திருப்திகரமான இராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் தரிசனம் முடிந்தபின் , தங்கி இருந்த ஹோட்டலின் அருமையான பொங்கல் வடை காலை உணவு பதைத்திருந்த மனதை அமைதிப் படுத்த , குளித்த சுகமும் சேர்ந்து கண்ணை அழுத்த ஒரு சுகமான பயணத்திற்குப் பின் சென்றடைந்தது உத்திரகோச மங்கை,   இந்தப் பயணத்தின் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட நடராஜரின் மரகத மேனி தரிசனம்
Utharakosa Mangai Natarajar 
இதன் சிறப்பு இங்குள்ள மரகத நடராஜர் வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டு இருக்க, வருடத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தின்  முதல் நாள் மட்டும் சந்தனம்  களையப்பட்டு , நள்ளிரவு அபிஷேகத்திற்குப்பின் மறுபடியும் சந்தனம் கொண்டு மூடப்படுவது தான். ஆகையால் இந்த சந்தன காப்பு இல்லாத மரகத தேகத்துடன் உள்ள தில்லை அம்பலத்தானைக்  காண பல லட்சங்கள் பேர் கொண்ட கூட்டம் இங்கு சேர்வது வழக்கம். நாங்களும் அந்த ஆசையுடன் தான் இந்தச் சுற்றுலாவில் சேர,  ஒரு புரிதல் குழப்பத்தினால் எங்களின் கணக்கு பிசகி நடராஜர் மீண்டும் சந்தன அங்கி பூசிக் கொண்ட பிறகு தான் பார்க்க முடிந்தது , பலரும்  ஜீரணிக்க, விழுங்க சிரமப்பட்ட ஏமாற்றமே.

இந்த ஒரு நாளில் மட்டும் பல லட்ச பக்தர்கள் கூடும் இந்நாளுக்கு இந்த கோவில் நிர்வாகத்தின் தயார் நிலை ஏமாற்றத்தை கூட்டியது. நாங்கள் சென்ற நண்பகல் நேரத்தில் அநேகமாக எல்லா கூட்டங்களும் குறைந்திருந்தது நூற்றுக்கும் குறைவான பக்தர்களே வந்தாலும் , இந்த புகழ் பெற்ற நடராஜரைக் காண பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்த்தும் வந்த பக்தர்களுக்கு அங்குள்ள பந்தோபஸ்துக்கு வந்திருந்த காவலர்கள் , தத்தம்  சீருடைலேயே இருந்தாலும் விபூதி பிரசாதங்களைக் கொடுத்தது கோவில் நிர்வாகத்தின் மெத்தனமா , அங்கு இருக்கும் குருக்கள்களின் போதுமென்ற மனத்தால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தப் பட்ட அலட்சியமா என்று புரியாமல் குழம்பினாலும் , பக்தி சிரத்தையுடன் குளித்து வெறும் வயிற்றுடன் நடராஜரைக் காண வந்த பக்தர்களை இதை விட அவமானப் படுத்த முடியுமா என்ற கேள்விதான் பிரதானமாக தலைதூக்கிக் காணப்பட்டது. கோவிலுக்கு ஒரு நாளில் வரும் சில லட்ச மக்களை எப்படி சமாளித்து திருப்தியாக அனுப்ப முடிவது என்று தெரியாமல் இருந்தால் பல நாட்களிலும் பல லட்சம் பக்தர்களை சமாளிக்கும் திருப்பதி போன்ற நிர்வாகங்களிலுருந்து கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாமே.  கடவுளுக்கு மிக அருகாமையில் பணி புரியும் ஒருவர் பிரகாரத்திற்கு வெளியிலேயே நின்று கொண்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் நடராஜருக்கு சாற்றப்பட்ட சந்தனம் வைத்திருந்த கையை 'மற்ற கையையும் கவனிக்கப்படாமல்'  நீட்ட மாட்டேன் என்று சொன்னதிலேயே புரிந்தது இவர்களின் சிரத்தையும் பக்தர்கள் மேல் கொண்ட அக்கறையும்.  ஆண்டவன்  அருகாமையிலேயே இப்படி பணம் பத்தும் செய்யும் பொழுது ஓட்டுக்காக வறுமையை தற்காலிகமாக சமாளிக்க , நியாய படுத்த முடியாத செயல்களை செய்யும் மக்களை மட்டும் கண்டு ஏன் கேள்வி          கணைகள் பாய்கின்றன என்று நினைக்க வைத்தது.

UtharakosaMangai Temple
தெய்வாதீனமாக பாரத மக்களின் இயற்கையிலேயே சமாதானப் படுத்திக் கொள்ளும் சாத்வீக குணத்தினாலும் , கொடுப்பினையின் பால் கொண்ட அதீத நம்பிக்கையினாலும்,  மேலும் சீக்கிரமே விக்கெட்டுகளை இழந்தே பார்த்து பழக்கப்பட்ட கிரிக்கெட் மாட்ச் அனுபவத்தாலும் சுதாரித்துக் கொண்ட குழு அருகில் எழும்பிக் கொண்டிருக்கும் புதிய வராஹி அம்மன் கோவிலைக் கண்டு, பதைத்திருந்த மனதை திடப்படுத்திக் கொண்டு  எதுவுமே நடக்காதது போல் விரைந்தது ஏற்கனவே தாமதிக்கப் பட்ட மதிய உணவை நோக்கி !


RameswaramVaarahi Amman
மதிய உணவில் ஆசுவாசப்பட்ட மனதை மேலும் சாந்த படுத்தியது  சேதுக்கரையில் நிலவிய அமைதியான சூழ்நிலை. இலங்கைக்கே பாலம் அமைத்து கடக்க முடியாதென்று நினைத்த தடைகளையும் உடைத்தெறிந்த இந்த இடத்தின் மகத்துவவமும்,  அதை செய்து காட்டிய ஸ்ரீ ராமரின் அனுக்கிரகமும்   இந்தக் குழுவிற்கு இனிமேலும் சோதனைகள்வர விடாது செய்யும்  என்ற நம்பிக்கையுடன் முன்னேறியது பக்தர்கள் குழு .

Sethukkarai
அடுத்துச் சென்ற திருப்புல்லானி திவ்ய தேசத்தில் லட்சுமண சுவாமியின் மடியில் தலை வைத்து லேசாக கண் அயர்ந்த ஸ்ரீஇராமரையும்  அருகே வாய் பொத்தி நிற்கும் அனுமனையும் , சரணாகதி அடைந்த சமுத்திர ராஜனையும்  கண்டதும் இவர்களை விடவா நமக்கு சோதனை வந்து விடப் போகிறது என்று அமைதி அடைந்தது மனது. இன்று நடந்த சம்பவங்களுக்கும் சோதனைகளுக்கும்  எனக்கு இவ்வளவும் தேவையாகத்தான் இருந்தது.

Thiruppullaani
ஒவ்வொரு முறையும் தீர்த்த ஸ்நான ஸ்ரார்த்தங்களுக்குப் பிறகு விரைந்து கிளம்பியதால் ராமேஸ்வரத்தில் உள்ள சில அரிய இடங்களை காணாமல் கோட்டை விட்டது இம்முறைதான் தெரிய வந்தது .  நாகநாதர் கோவிலுக்குப் பிறகு போன துளசி பாபா மடம் என்ற இடத்தில் சில மிதக்கும் கற்களைக் காட்டி கோவில் கட்ட தகுந்த நன்கொடை கொடுத்தால் ஸ்ரீ இராமர் கையால் தடவிக் கொடுத்த ஓர் கல் இனாம் என்று சொன்னவுடன் 'தோ பார்றா' என்று நடையைக் கட்டினோம்.


அருகிலேயே உள்ள ஸ்ரீ கிருஷ்ண ப்ரணாமி மங்கள் மந்திர்என்ற பளபளப்பான கோவிலின் மாடியில் உள்ள மற்றமொரு பார்க்க வேண்டிய இடம் ஒரு அருங்காட்சியகம் .  பின் நிறைந்த மனத்துடனும் காலியான வயிற்றுடனும் ஆர்ய பவன் என்று பெயரைப் பார்த்து ஏமாந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களை எப்படி அதிருப்தி படுத்துவது என்பதை  விளக்கமாகக்  கற்றுக் கொடுத்தார்கள்.

Sri Krishnan Parnami Mangal Mandir Museum
நாள்-3 (03-Jan-2018)

ஒரு சுக உறக்கத்திற்குப்பின் அதிகாலையில் கிளம்பி இயற்க்கைச் சீற்றத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமான தனுஷ்கோடியைக் காண விரைந்து அதற்க்கு முன் தரிசித்தது அழகிய கோதண்டராம சுவாமி கோவிலை. விபீஷணருக்கு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் செய்ததாக நம்பப் படும் இது ஓரு சிறிய ஆனால் அழகான பார்க்க வேண்டிய இடம்.

Dhanushkodi, Kodhanda Rama Swamy temple
போன வருட மார்ச் மாதத்தில் சென்ற போது சாலை போட்டு முடித்தும் எந்த 'மாண்புமிகு' விற்கோ காத்திருந்த சாலை நல்ல வேளையாக  திறக்கப் பட்டிருந்ததால் ஒரு முதுகை வளைக்கும் பயணம் தவிர்க்கப்பட்டு தனுஷ்கோடி கடற்கரையை அடைந்து சில போட்டோக்களை எடுத்துக் கொண்டு திரும்பிய சில நேரத்தில் ராமேஸ்வரத்தை விட்டு கிளம்பியது அந்த ஜாலியான குழு.

Dhanushkodi Beach
முன்னதாக ஹோட்டலில் காலை உணவுக்காக சென்ற பொழுது நடந்த சம்பவம் ஹோட்டல் என்ற நாவலை நினைவுப்  படுத்தியதில் கதாசிரியர் ஆர்தர் ஹெய்லியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இரண்டு நாள் பயணத்தில் அநேகமாக எல்லோரும் ஒருவரை ஒருவர் பரிச்சய படுத்திக் கொள்ள  சில  நட்பு வட்டங்கள் உருவாகின.

அடுத்து சென்ற இராமர் பாதம் என்ற சிறிய மலையிலுருந்து தெரியும் அருமையான காட்சிகள் புகைப்பட பிரியர்களுக்கு ஒரு விருந்து .

Panoramic view from Ramar Padham
இராமேஸ்வரத்தில் புதிய சுற்றுலா  மையமாக உருவெடுத்து வரும், அநேகமாக அனைவரும் மதிக்கும் முன்னாள் ராஷ்டிரபதியும்  விஞ்ஞானியுமான  அப்துல் கலாம் என்ற மாமனிதரின் நினைவிடத்திற்குத்தான், அடுத்து விரைந்தது.  மிக எளிமையாக அதே நேரத்தில்  நேர்த்தியாகவும் இருந்த நினைவிடம் வருங்காலத்தில் இன்னும் மிகப் பெரிய கூட்டங்களைக் காண விருப்பது என்னவோ உண்மை .










அடுத்து விரைந்த தேவிபட்டினம் என்ற தலத்தில் நாங்கள் அநேகமாக நண்பகலில் சென்றதால் ஐந்து நவபாஷாண விக்ரகங்கள் மட்டுமே  தெரிந்தன மற்றவைகளெல்லாம் ஏறி வரும் நீர் வரத்தால் மறைந்தே இருந்தது

Devipattinam
அநேகமாக எல்லோரும் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருந்து , மக்கள் விநியோகித்த இனிப்பு மற்றும் காரங்களை முடித்தபின்னும்  போய்க்கொண்டே இருந்த வாகனம் ஓட்டுனரின் ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவினால் கிடைத்த போனஸ் காளையார் கோவில். ஐந்து பிரதான சந்நிதிகளைக் கொண்ட இந்த பிரம்மாண்டமான கோவிலில் இருந்த குருக்களின் மனதும் அதே அளவில் பறந்து இருந்ததால் நிதானமாக எல்லா சன்னதிகளிலும் தரிசன ஆரத்தி மிகுந்த திருப்தி அளித்தது.

Kalaiyar Koil
மாற்றிய பாதையில் கிடைத்த மற்றோரு போனஸ்தான் நாட்டரசன் கோட்டை. இந்த ஊருக்கும் எனக்கும் ஒரு ஐம்பது வ்ருடங்கள் தாண்டிய நினவுத் தொடர்பு இருந்ததால் இந்த மாற்று ஏற்பாடு எனக்கு மிகுந்த  மகிழ்ச்சி அளித்தது. இந்த ஊரின் கண்ணாத்தாள் கோவில் கண் நோய்களை தீர்ப்பதில் மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது மட்டுமல்லாது இக்கோவிலின் எதிரில் உள்ள குளத்தை குடிநீருக்கு மட்டும் உபயோகப்படுத்தும் இந்த ஊர்க்காரர்களின் கட்டுப்பாடும் வியக்க வைக்கும் ஒரு செயல் .

Nattarasankottai
நம் நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் உலகிலேயே மிகச் சிறந்தவற்றுள் ஒன்றாக இருந்தாலும் சுற்றுலாத் துறையில் நாம் இன்னும் மக்களின் நம்பிக்கையைப் பெறாததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று போதிய தகவல்கள் வேண்டிய நேரத்தில் இல்லாதது . ஒரு பிரசித்தி பெற்ற இடத்துக்குப் போவதற்கு முன் அநேக பயணிகள் அந்த  இடத்தின் பெருமை, அது திறந்து இருக்கும் நேரம், அந்த இடத்துக்கே உரித்தான சம்பிரதாயங்கள், அங்கு அனுமதிக்கப் படும் - முக்கியமாக அனுமதிக்கப்படாத- உடைகள், உடைமைகள் இப்படிப்பட்ட சில தகவல்கள் தான். ஆனால் நான் சமீபத்தில் சென்ற கேரள திவ்ய தேசங்கள் சிலவற்றிலும் திருக்கோஷ்டியூர் போன்ற இடங்களிலும் இப்படிப்பட்ட முக்கிய தகவல்கள் இல்லாத காரணங்களால் பயணிகள் படும் பாடு சொல்லி மாளா .  இத்தனை தடைக் கற்களையும் மீறி மக்கள் வருகிறார்களென்றால் அது அவர்களின் பக்தியால் ஏற்பட்ட வைராக்கியமே தவிர சுற்றுலாத் துறைக்கோ கோவில் நிர்வாகங்களுக்கோ இதில்  கொஞ்சமும் பங்கில்லை .

 திருக்கோஷ்டியூர் என்ற திவ்யமான தேசத்தை நாங்கள் சென்றடைந்த பொழுது அநேகமாக ஆறு மணி. சுவாமி புறப்பாடு நடக்க எல்லா ஏற்பாடுகளும் தெரிந்தும் அதற்க்கு ஏற்ப மக்களை உள்ளே போக விடாமல் தடுத்து நிறுத்தினாலும்  எப்பொழுது  தரிசிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. சிப்பந்தி ஒருவர் கொஞ்சமும் தயங்காமல் 'இன்று போய் தரிசனத்திற்கு நாளை வா என்றார்.  நகர மறுத்து ஒரு சின்ன வேலை நிறுத்தம் போல அடம் பிடித்தபின்தான் ஒருவர் வந்து -  சீருடை ஒன்றும் அணியாததால் அவர் கோவில் சிப்பந்தியா இல்லையா என்று சரியாக கணிக்க முடியவில்லை-  'கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லோருக்கும் தரிசனம் செய்து வைப்பதாகச்' சொன்னார் . ரங்கநாதரைப் போல்  நீண்டு பள்ளி கொண்டிருந்த பெருமாளை தரிசனம் செய்து வைத்து அதன் பின் ஒரு மிகக் குறுகிய பாதை வழியே -  ஒருவர் தான் செல்லலாம் - சில படிகள் ஏறி , அதன் பின் தவழ்ந்து சென்று மீண்டும் ஏறி , கோபுர உச்சிக்கு கூட்டிச் சென்று அங்குள்ள இராமானுஜரின் புராணத்தை  விளக்கியத்தைக் கேட்க  பக்தியால் சில ரோமங்கள் சிலிர்த்து நின்றன.

Narrow passage at Thirukoshtiyur
அந்த உச்சியில் நின்று இராமானுஜரின் பார்வையிலுருந்தே தெரிந்த அந்த வெள்ளை நிற வீட்டைப் பார்க்க இப்படிப்பட்ட  தரிசனத்திற்கு  எவ்வளவு சிரமப்பட்டாலும் தகும் என்று தோன்றியதும் உடையவருடன் எடுத்துக் கொண்ட ஒரு செல்ஃபீ  மறக்க முடியாத அனுபவம் . இங்கு 'அந்த யாரோ' மட்டும் வந்திராவிட்டால் நாங்கள் வீணாகத் திரும்பி இருப்போம் .

Selfie with the Saint
ஒரு சூடான காபிக்குப் பிறகு நாளின் கடைசி விஜயமாக திருப்பத்தூர் சிவன் கோவில் தரிசனம். கால பைரவருக்கு விசேஷமான இந்த பெரிய கோவில் ஆட்கள் இல்லாமல் அமைதி தரிசனமளித்தது நாள் முழுவதும் சுற்றிய கால்களுக்கு கொஞ்சம் சுகமாத்தான் இருந்தது .

Thiruppathur
சுற்றுலாவின் கடைசி இரவிலும் ஹோட்டல் கொஞ்சம் தன் பங்குக்காக பாடாய்ப் படுத்தி ஏ சி இல்லாமல் இரவு பத்து மணிக்கு மீண்டும் அறையை மாற்றி ..... நம்ம ஊருக்கும் வாடிக்கியாளர்கள் சேவைக்கும் ரொம்ப தூரம் !!

நாள்-4 (04-Jan-2018) 

அநேகமாக எல்லா இடங்களையும் பார்த்த கடைசி நாள் வழித்து வார்த்த தோசை போல் இருந்த சொச்ச மிச்சங்களைத்தான் பார்ப்பதாக இருந்ததால் எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக எழுப்பப் பட்டோம். எல்லா இடங்களிலும் சிறிது சத்தமும் நிறைய பணமும் தான் வேலையை முடிக்க உதவுகிறது என்ற ஞானோதயத்துடன் கிளம்பினோம்.

முதலில் சென்ற கோவிலூர் சிவன் கோவில் அழகிய குளத்தினூடே உள்ள ஆழி மண்டபம், ராமேஸ்வரத்தை நினைவுப்படுத்தும் நீண்ட பாதைகள் என்றும் சிற்பங்களாலும் திகைக்க வைத்தது .

Koviloor
அருகிலேயே இருந்த குன்றக்குடி என்ற சிறிய மலை ஏறுவதற்குள் அனைவருக்கும் பௌண்டரிக்கு பந்தை  துரத்தியது போல் மூச்சு வாங்கியது  இப்படிப்பட்ட பயணங்களை வயது ஏறுவதற்குள் முடிக்க வேண்டும் என்று மீண்டும் நினவுப் படுத்தியது! பத்து ரூபாய் கொடுத்து ( பணம் கொடுத்து கிடைக்கும்  ஸ்பெஷல் தரிசனங்களை கோர்ட் தடைப்படுத்தியதாக ஒரு நினைவு - என் நினைவு சரிதானா?)  முருகனுக்கு கிட்ட போய் அதே கோரிக்கைகளை சொல்லிவிட்டு  பஸ் ஊழியர்கள் போல காத்திருக்க முடிவு செய்து திரும்பினோம்

Kunrakudi
பிள்ளையார்பட்டி அருகாமையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகளின் எண்ணிக்கைகள் கொஞ்சம் பயமுறுத்தினாலும் கற்பக விநாயகர் ஏகாந்தமாய் உட்கார்ந்து கொண்டு திருப்தியாக காட்சி அளித்தது ஒரு எதிர்பாராத நிதான தரிசனம் .

Pillaiyarpatti
அப்புறம் தான் தெரிய வந்தது அங்கு வந்த வண்ண உடை அணிந்த பல பக்தர்கள் அருகாமையிலுள்ள இடங்களுக்கு கால் நடையாகவே சென்றிருப்பது. இந்த இடத்தில் சில பக்தர்கள் (அனைவரும் அல்ல)  செய்யும் ஒப்புக்கொள்ள முடியாத , நான் பார்த்த , செயல்களை குறிப்பிட வேண்டும். அநேகமாக எல்லோருமே தங்களை ஒரு தனிப் பிறவியாகவும் மற்றவர்களை  அற்ப பதர்கள் போலவும் நினைக்கிறார்களோ என்றெண்ணத் தோன்றும் அவர்களின் நடவடிக்கைகள்-  ரயிலில் அனைவரும் தூங்கினாலும் இவர்களின் கைபேசிலிருந்து உரக்க ஒலிக்கும் பக்திப் பாடல்கள் , ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களிலும் எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பும் வழக்கும் - ஏன் என்று கேட்டதற்கு ஒரு முறை சுட்டெரிக்கப் பார்த்து விட்டு நகர்ந்தார், பல பேர் வரிசையில் நின்றாலும் இவர்களுக்கென்னவோ க்ரீன் சானலில் ஆண்டவன் விசா கொடுத்ததுபோல்  மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாமல் முந்தியடித்துக் கொண்டு முன்னேறுவர்  !! பக்திக்கு முன் சிறிது பணிவும் தேவை என்பதை உணர்ந்தால் சரி

வயிரவன் கோயில் என்ற நகரத்தாரால் பராமரிக்கப்படும் கோவில்  இங்குள்ள குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கிடையே அமைதியாக பல அற்புத சிற்பங்களுடன் காட்சி அளித்தது.

Vayiravan Temple
காரைக்குடிக்கே பிரசித்தமான கொப்புடையம்மன் கோவிலில் மார்கழி சிறப்பு நிகழ்ச்சியாக சிறுவர் சிறுமிகளூடே திருப்பாவை போட்டி நடந்து கொண்டிருக்க உச்சி கால தீபாராதனையுடன் அம்மனை தரிசித்தது ஒரு திருப்திகரமான அனுபவம்.

Koppudaiyamman temple
அன்னலட்சுமியின் மதிய உணவு தந்த தூக்கத்திற்குப் பிறகு சென்ற மாத்தூர் சிவன் கோவிலில் உயர்வு தரும் நந்தி சற்று உயரே சிம்ம பீடத்தில் இருந்தது முதன் முறையாக காணும் காட்சி .

Maathoor
Nandhi 
இலுப்பைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சிற்பங்களை ரசித்தபின் சென்ற நகரத்தார் கோவிலின் பராமரிப்பு பிரமிக்க வைத்தது.

Iluppakkudi
அருகிலேயே உள்ள யோக சனீஸ்வரர் ஆலயம் மிக சக்தி வாய்ந்ததாம்.

Yoga Saneeswarar Koil
 ஒட்டி இருந்த  108 பிள்ளையார் கோவிலின் விசேஷம் மேல் வரிசை  54 பிள்ளையாரும் வலஞ்சுழியாக இருக்க கீழ் வரிசை  அனைத்தும்  இடஞ்சுழி விநாயகர்கள்.

108 Pillayars
அரியக்குடி சிவன் கோவிலில் யாருமே இல்லாமலிருக்க அரியக்குடி பெருமாள் கோவில் புனரமைக்கப் படுவதால் பாலாலயத்தில் உள்ள பெருமாளின் தல வரலாற்றைச் சொன்ன பட்டரின் குரல் கேட்காத அளவுக்கு அருகிலிருந்த சில கும்பாபிஷேகக் கமிட்டி அங்கத்தினர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.

Ariyakudi
எதிரில் இருந்த அருமையான  கோவிலில்  பிரத்யேக  நரசிம்மரை வணங்கி தலை நிமிர்ந்தால் பயண முடிவுக்கு ஆதரவளிப்பது போல நின்றிருந்த ஹனுமனை தரிசித்து காரைக்குடிக்கு கையசைத்து விடை கொடுத்தோம் !

Ariyakudi Narasimhar
 மூன்று நாட்கள்,  இருபத்து மூன்று கோவில்கள்,  சில சுற்றுலா தலங்கள் - இப்பொழுது நினைத்தால் மூச்சு வாங்குகிறது .

ஆனால் கண்ட காட்சிகள் தேனாய் இனிக்கிறது - என்றும்  இனிக்கும் !


இடது பதம் தூக்கி ஆடுபவனைக் காண வந்தவர்களையும் தரிசினத்திற்கும் சௌகரியமான அறைக்கும் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்ய வைத்ததும் அவன் செயலோ ?

இப்படிப்பட்ட திருத்தலங்களைக் காண  எந்த சிரமமும் எவ்வளவு காசும் செலவழிக்கலாம் - இருக்கும்போதே தூற்றிக் கொள்பவன் புத்திசாலி !!

எத்தனை சிரமங்கள் இருந்தாலும் பார்க்க வேண்டிய செட்டிநாட்டு திருத்தலங்களுக்காக  ஒற்றைக்கால் தவமும் தகும்


Sunday, December 24, 2017

மலைக்க வைத்த மலை நாட்டு திவ்ய தேசங்கள்

போன டிசம்பர் (2016) மாதத்தின் 'ஐந்து நாட்களில் நாற்பது சோழ நாடு திவ்ய தேச தரிசனத்தின்'  இனிய நினைவுகள் இன்னும் மறவாத நிலையில், ஸ்ரீ ஜானகி டூர்ஸ் அனைத்து கேரள மலை நாடு திவ்ய தேசங்களையும் நான்கு நாட்களில் பார்க்கப் போவதாக அறிவித்தவுடன் 'உள்ளேன் ஐயா' என்று கையைத் தூக்கி பந்திக்கு முந்திக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை இன்று , பயணம் முடிந்தவுடன் நினைவு கூர்ந்து பார்ப்பதில் பெருமையும் இனிமையும் மேலோங்கி நிற்கிறது .

கேரள விஜயம் இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் போன்று அதற்க்கென்று நிறைய முன்னேற்பாடுகள் தேவை. அங்கு வழக்கமாக கிடைக்கும் கொட்டை அரிசியை சமாளிக்க வேண்டும் , கையில் விரலுடன் சேர்த்து எப்பொழுதும் குடையும் இருக்க வேண்டும். முக்கியமாக அதிகாலை எழுந்திருக்க  பழக்க வேண்டும் ஏனென்றால் அங்குள்ள அநேக கோவில்களை நான்கு மணிக்குத் திறந்து சீக்கிரமே நடை சார்த்தி , உம்மாச்சியை தட்டி தாச்சி தூங்க வைத்து விடுவார்கள்.  அதிகாலை இயற்கை உபாதைகளுக்கு கூடுதலாக ஒன்றிரண்டு மலை வாழைப் பழங்களை உள்ளே தள்ள வேண்டும் ; ஜானகி   டூர்சில் அந்த பயம் தேவையில்லை - ரமேஷ் அதிகாலை நான்கு மணிக்கு கூட சுடச் சுட பில்டர் காபி கொடுத்து விடுகிறார் !! இப்படி அவரவர்கள் தங்கள் உடல்கூற்றுக்கு ஏற்ப தயார் செய்து கொள்வது முக்கியம் . ஆனால் இருந்த கழுத்தளவு வேலைகள் நடுவே மேற்கூறிய எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் தைரியமாக திருவனந்தபுரம் மெயிலில் ஏறி உட்கார்ந்தவுடன் வரவேற்றது அருமையான இட்டிலிகளும் தயிர் சாதமும் !

சரியாக ரயில் டிக்கெட் கூட வாங்காத சில கருப்பு உடை அணிந்த பக்தர்கள் ( ஒரே படுக்கையில் விளக்கு அணைத்தவுடன் இருவர் படுத்திருந்தனர்) , தாங்கள் என்னவோ ரயிலையே விலைக்கு வாங்கி விட்டதாக நினைத்து போட்ட ஆர்ப்பாட்டம் . . . . மசாலா நெடி எல்லோரையும் கைக்குட்டையை நோக்கி ஓட வைத்த தின் பண்டங்கள் , மூன்று பேர் உட்கார வேண்டிய இடத்தில் ஐந்து பேர், எல்லோரும் படுத்து விளக்கை அணைத்தவுடன் செல் போனில் உரத்த ஒலியில் பக்தி பாடல்கள் - இந்த எல்லா உபத்திரவங்களை மீறி எதோ தூங்கி காலை ஐந்து மணிக்கு திருச்சூரை அடைந்தவுடன்  குளிர்ந்த காலையும்  சிரித்த முகத்துடன் வரவேற்ற வேன்  ஓட்டுனரும் நம்பிக்கையை  கூட்டினர் .

நாள்-2 (20-Nov-2017) :

அருமையான ஹோட்டலில் ஒரு நல்ல வெந்நீர் குளியலுக்குப் பின் துவங்கிய யாத்திரை இரிஞ்சாக்குடா என்ற நாலம்பலங்களில்  ஒன்றான   க்ஷேத்திர விஜயத்துடன்தொடங்கியது . நாலம்பலம் என்பது கேரளத்தில் ஸ்ரீ ராமர் சகோதரர்களுக்கான உள்ள நான்கு கோவில்கள். இதில்   இரிஞ்சாக்குடா   பரதன் கோவில்.

IRUNJALAKUDA
அடுத்து போனது சத்ருக்ன சுவாமியின்  பாயாமல்   என்ற திருக்கோவில்.  அநேகமாக எல்லா கேரளக் கோவில்களை போல் இதுவும் படு சுத்தமாக , அமைதியுடன் ஒரு ரிசார்ட் போன்ற அமைப்பின் நடுவே அழகிய பெருமாள் அரையிருட்டில் பல கேரள விளக்குகளின் ஒளியூடே அற்புதக் காட்சி அளித்தார்.

PAAYAAMMAL
பின் விரைந்த ஸ்ரீ ராமரின் த்ரிபரையார்   என்ற கோவில் முகப்பே வெகு அழகாக நம்மை வரவேற்கும். ஒரு திரைப்பட செட் போன்ற வண்ணக் கூரையைத் தாண்டியவுடன் வெகு பவ்யமாக வணங்கும் ஹனுமனை ஸ்ரீ இராமரின் பார்வையிலேயே கருணையைப் பொழியும் ஒரு சித்திரம் பக்தியை பன்மடங்கு தூண்ட வல்லது.  வெடி வெடித்து நேர்த்திக்கடனை செலுத்தும் இத்தலத்தின் பின்புறம் ஓடும் ஆறு ஒரு அருமையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது. கோவிலுள் ஜொலித்த கேரள விளக்குகளும் , வண்ணக் குடையும் ஆற்றைச்சுற்றி நிற்கும் தென்னைகளும் , நீங்கள் கேரளத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யும்.

TRIPAAYAR
அதி வேகமாக வந்தும் வடக்குநாதன் கோவில் மூடி விட்டதால் அதன் எதிரே உள்ள 'படான்ஸ்' உணவகத்தின் மதிய உணவு கொடுத்த கோழி தூக்கத்திற்குப் பிறகு சென்றது 'திருநாவாயா' (1) என்ற திவ்ய தேசம். பரதப்புழா  என்ற ஆற்றின் கரையில் அமைந்திருக்கும்  நவமுகுந்தனின்     இந்தத் திருக்கோவிலின் அழகு இங்கு உங்களை புகைப்படம் எடுக்காமல் நகர விடாது .

THIRUNAVAYA
கார்த்திகை இருள் அதி விரைவில் சாலைகளை கவர்ந்து கொள்ள பின் சென்ற  ' திருவித்வக்கோடு ' (2)  , ஒரு மிகப் பழமையான திவ்ய தேசம். இன்னும் சில நிமிடங்களே மூடுவதற்கு இருந்த நிலையில் துளி ஒளி கூட இல்லாத நிலையிலும் அநேகமான மூத்த குடிமக்களே இருந்த எங்கள் குழு அந்த முக்கால் இருட்டிலும் எந்தத் தயக்கமும் இல்லாமல் விரைந்ததற்கான ஒரே காரணம் இந்தச் சூழலில் அமர்ந்திருக்கும் பெருமாளை தரிசித்தே தீர வேண்டும் என்ற வைராக்யமாகத் தான் இருக்க வேண்டும்.  நகுல சஹாதேவனுக்கு சந்நிதிகள் உள்ள , முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஒரு உகந்த இடமாகக் கருதப்படும் இந்தத் திருத்தலத்தில் , நாம் அதி வேக வேனில் வந்தும் கஷ்டப்பட்டதாகப் புலம்பும் பொழுது அந்தக் காலத்தில் நடந்தே வந்து மங்களாசாசனம் பாடிய குலசேகராழ்வாரை நினைத்து  கை கூப்பாமல்  இருக்க முடியவில்லை .

THIRUVITHVACODE
நாள்-3 (21-Nov-2017) :

நடந்த நடைக்கும் கவர்ந்த மைல்களுக்கும் தங்க வைத்த இடத்தின் ஏ.சி கொடுத்த சுகத்தில் தூக்கம் தானாக வந்து மட்டையாகிப் போக,  நான்கு மணி அலாரம் தான் நித்திரையைக் கலைக்க உதவியது. அதிகாலை தரிசனமாக 'திருமூழிக்குளம்' (3) என்ற லட்சுமண சுவாமி கோவில் திவ்ய தேசமட்டுமின்றி நாலம்பத்திலும் ஒன்றாகும். அதிகாலையிலேயே போனதால் கேரளக் கோவில்களுக்கே உரித்தான 'சீவேலி' என்ற பிரதக்ஷணங்களையும் காண முடிந்தது. பெரிய கோவிலின் சுற்றி உள்ள நூற்றுக் கணக்கான விளக்குகளை எப்பொழுது, எப்படி ஏற்றுவார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

THIRUMOOZHIKULAM
அடுத்துச் சென்ற 'திருக்காக்கரை' (4) என்ற மக க்ஷேத்திரம் இரண்டு  கோவில்களை கொண்டது. முகப்பில் இருந்த வாமன அவதார சிலையும் கோவிலைச் சுற்றி போடப்பட்டிருந்த வண்ண மயமான தரையும் , காலை நடை பயிற்சி போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களின் தாபத்தைத் தணித்து அழகிய புகைப்படத்தையும் ஞாபகார்த்தமாக கொடுத்து அனுப்பி வைத்தது.

THIRUKAAKARA
பாஷை பரிச்சயமில்லாத தேசத்தில் வண்டி ஓட்டுனரின் 'இதோ இதோ' என்ற உறுதியை நம்பித்தான் பயணிக்க வேண்டி இருக்கிறது . ஓட்டுனரின் இந்த உறுதி மொழி இம்முறை சற்றே ஏமாற்றத்தை அளிக்க விரைவாக சிந்தித்த பயண மேலாளர் விடாமல் பிடிவாதமாக கூடவே ஓடி வரும் சிறிய ஓடையின் அழகில் மயங்கி வண்டியை நிறுத்தி ஆலப்புழாவிற்க்கே பிரபலமான  ஒரு படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தது அன்னாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் !  மிகக்  குறைந்த செலவில் ஏறக்குறைய ஒரு மணி நேர படகு சவாரி அனைவரையும் பசி மறந்து ரசிக்க வைத்தது.  கேரளத்துக்கே உரிய தென்னைகள் தலை குனிந்து ஓடும் தண்ணீரை முத்தமிட முயல , அமைதியாக நீந்திக் கொண்டிருந்த வெள்ளை நாரைகளும் சில கருப்பு வாத்துகளும்  பயந்து  சிறகடிக்க  குழுவினர் பாய்ந்து பாய்ந்து கேரள அழகை கைப்பேசியின் சொல்ப மெகா பைட்டுகளில் முடக்க முயன்று வெற்றியும் பெற்றனர் .

ALLEPPEY_BOATING
அற்புத படகு சவாரிக்குப்  பின் விரைந்த திருக்கொடிதானம் (5) என்ற திவ்ய தேசம் ஒரு நல்ல சாப்பாட்டிற்கு பின் சிறிது கண் அசர முயன்றவர்களை ஒரு தீடீர் மழையால் எழுந்து அமர வைத்தது . பெருமாளே வந்தாலும் கேரளக் கோவில்கள் உரித்த நேரத்தில் தான் திறப்பார்கள்.

THIRUKADITHAANAM
பொறுமையாக இருந்ததற்கு கிடைத்த அறிய பரிசான  அருமையான  சாயரக்ஷை தரிசனத்திற்குப் பிறகு கிடைத்த ரமேஷின் சுடச் சுட காபி மக்களை மட்டும் ஊக்குவிக்காமல் ஓட்டுநரையும் உசுப்பியதில் ஆக்சிலேட்டர் மேல் வைத்த காலை எடுக்க மறந்ததால் ஆரண்முழா பார்த்தசாரதி (6) கோவிலான அடுத்த திவ்ய தேசத்தை விரைவாகவே அடைய முடிந்தது.

ARANMULA
இந்த ஓட்டம் போதாது இன்னும் சில நிமிடங்களில் அடுத்த திவ்ய தேசமான  திருவள்ளா (7) மூடி விடுவார்கள் என்று பயமுறுத்தியதால் எவ்வளவு விரைந்தாலும் ஒரு சிலரே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. சீவேலி தொடங்கியதால் அங்கு இருந்த பட்டர் அறிவுரையின் பேரில் பொறுமையாக காத்திருந்ததில் மீதமிருந்த சிலரும் தரிசனம் செய்து கொள்ள அனைவரும் திருப்தியாக வாசலில் இருந்த தங்க தூண் அருகே சில புகைப் படங்களுக்குப் பின் சந்தோஷமாக மசால் தோசை சாப்பிட ஹோட்டல் திரும்ப முடிந்தது .

THIRUVALLA
நாள்-4 (22-Nov-2017) :

 திருவள்ளாவில் இருந்த ஹோட்டல் தங்குவதற்கு அருமையாக இருந்தாலும் அதிகாலையில் வெந்நீர் கொடுக்காமல் படுத்தி எடுக்க, சிலர் கிளம்ப வேண்டிய நேரத்திலும் துண்டைக் கட்டிக்க கொண்டு குளிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க நேரம் பறந்தது. கொடுத்த காலை உணவு நன்றாக இருந்தாலும் வெந்நீர் கடுப்பில் ஆளாளுக்கு கவுண்டரில் இருந்த நேற்றுத்தான் வேலைக்கு சேர்ந்திருந்த பெண்ணை வறுத்து எடுத்த திருப்தியில் கிளம்பினார்கள் .

அடுத்து சென்ற திருவண்வண்டூர் (8) என்ற நம்மாழ்வார் பாடிய இந்த திவ்ய தேசம் காலை நேரத்தில்   அருமையாக இருந்தாலும் எந்த மஹாநுபாவனோ  தரையை சரியாக பாவாமல் சிறிய கற்களை போட்டு நிரப்பி இருந்ததால் அனைவரும் கொஞ்சம் நொண்டி அடித்துக் கொண்டே  விரைந்தார்கள் .

THIRUVANVANDUR
அடுத்து விரைந்த திருச்சிற்றாறு (9) என்ற திவ்ய தேசம் ஒரு சிறிய , ஆனால் அழகிய கோவில். கூட்டமே இல்லாத அமைதியான காலையில் ஒரு மன நிறைவான தரிசனம் .

THIRUCHITTAARU
பின் சென்ற திருப்புலியூர் (10)  , ஒரு மிகப் பெரிய அழகான கோவில். கோடைகால விடுதி போல பராமரிக்கப் படும் இந்த இடத்தில் உள்ள பீமனின் பெரிய கதை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பெரிய ஈர்ப்பு.  இதனருகில் நின்று புகைப் படம் எடுக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வளவு பரபரப்புகளுக்கு நடுவே சில உள்ளூர் பக்தர்கள் அமைதியாக பாடிக்கொண்டிருந்தார்கள் !!

THIRUPULIYUR
பக்கத்திலிருந்த த்ரிப்போரூர் முருகன் கோவில், திவ்ய தேசமாக இல்லா விட்டாலும் , இந்த சுற்றுலாவில் கிடைத்த ஒரு நல்ல போனஸ். இந்த எளிய கோவிலில் இருந்த சில அறிய சிற்பங்கள் அதிசயிக்க வைத்தது .

THRIPORUR
பின் திருவனந்தபுரத்திற்கு  வந்த நீண்ட பயணம் நல்ல வாநிலையாலும் , நடுவில் எல்லோரும் சுவைத்த ஐஸ்க்ரீமினாலும்  சற்றும் சிரமம் தெரியாமல் அமைந்தது.

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் (11) தரிசனம் என்றுமே கொஞ்சம் பரபரப்பானது தான். ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் , வேட்டியைத் தவிர எதற்குமே அனுமதி கிடையாது- போதாக் குறைக்கு மாலை வேளையில்  உடனுக்குடன் கதவைச் சாத்தி விடுவார்கள். டிசம்பர் மாதத்தில் இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களின் கூட்டம் வேறு. இவை அனைத்தும் இருந்தும் இந்த முறை கிடைத்த தரிசனம் அருமை. எடுத்துச் சென்ற விஷ்ணு ஸஹஸ்ரநாம புத்தகத்தை திறப்பதற்குள் தரிசனம் நிறைவடைந்திருந்தது . வெளியே வந்ததும் மீண்டும் உள்ளே சென்று கிட்டிய  தரிசனம் தான் கூடுதலான ஊக்க போனஸ் !

ANANTHA PADMANABHA SWAMY
பெரிய கோவிலில் நிறைவான தரிசனம்,  ஸ்ரீ ஜானகி டூரின் சொன்ன எல்லா திவ்ய தேசங்களும் நிறைவடைந்திருந்த ஒரு நிம்மதி கலந்த பெருமூச்சு அனைவரிடமும் தெரிந்தது. அருகிலுள்ள சிப்ஸ் கடைக்கு சில ஆயிரங்களைக்  கொடுத்து விட்டு எடுத்துச்சென்ற  பெட்டியின் அளவைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் சிப்ஸ் பொட்டலங்களை அள்ளிக் கொண்டு நடந்தே வந்து அருகிலுள்ள இந்தப் பகுதியில் மிகப் பிரபலமான மிலிட்டரி விநாயகரின் கூட்டமிருந்தும் நிறைவான தரிசனம்.

MILITARY VINAYAGAR
தினத்தின் , சுற்றுலாவின் கடைசி தரிசனமாகக் கிடைத்தது , சக்தி வாய்ந்த உலக சாதனைகளில் கூட்டத்திற்காக இடம் பிடித்திருந்த  ஆற்றுக்கால் பகவதி  கோவில் .

AATRUKAAL BAGAWATHY
நாள்-5 (23-Nov-2017) :

ஸ்ரீ ஜானகி டூர்சில் சொன்னது என்னவோ கேரளத்தில் உள்ள பதினொன்று திவ்ய தேசங்கள் தான்  - சொன்னபடி அவைகளை திவ்யமாக தரிசிக்க வைத்து கடமையை முடித்து சொன்ன சொல்லைக்  காப்பாற்றியும் விட்டார்கள்   ஆனால் மலை நாடுகள் திவ்ய தேசம் மொத்தம் பதிமூன்று. மீதமிருந்த இரண்டு திவ்ய தேசங்கள் தமிழ் நாட்டில் இருந்ததாலோ என்னவோ அவைகள் இந்த பட்டியலில் சேர்க்கப் படவில்லை. ஆனால் மீண்டும் நாகர்கோவில் அருகிலுள்ள இந்த இரண்டு திவ்ய  தேசங்களுக்கும் எடுத்து கூட்டிக் கொண்டு வருவது சிரமமென்பதால் திருவனந்தபுரத்தை சுற்றிப் பார்க்கக் கொடுத்திருந்த கடைசி நாளை நான் இந்த இரண்டு திவ்ய தேசங்களையும் பார்க்க செலழிப்பதாக முடிவு செய்திருந்தேன் .

ஹோட்டல் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரத்யேக காரில் கிளம்பிய நான்கு பேர் குழு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது பெருமாளை தரிசிப்பதிலேயே குறியாக இருந்தது அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து நான்கு மணிக்கு கிளம்பியதிலேயே தெரிந்தது.

கொஞ்சம்  தேவைக்கு அதிகமாகவே டென்க்ஷன் இருந்தததற்குக் காரணம் யாருமே இந்த இரண்டு கோவில்களின் நடை திறப்பு விவரங்களை சரியாக சொல்லாததுதான். இருந்தும் அதிகாலையிலேயே கிளம்பியதால் கிட்டத்தட்ட ஆறேகால் மணிக்கே திருவட்டாறு (12)  திவ்ய தேசத்தை அடைந்தது , நிம்மதியை அளித்தது. கோவிலில் பாலாலயம் நடந்து கொண்டிருந்தாலும் திடீரென்ற அங்கு வந்த ஒருவர் எங்களை கூட்டிச் சென்று புதிதாக வடிவமைக்கப் படும் சயனப் பெருமாளை, அவரது நீண்ட விரல்களை, ப்ரத்யேகமாகக் காண உதவியது சிலிர்க்க வைத்தது.

THIRUVATTARU
மிக அருகிலேயே இருந்த திருப்பதிசாரம் என்றழைக்கப்படும் திரு வெண்பரிசாரம் (13) என்ற திவ்ய தேசம் அமைந்திருந்தது ஒரு சிறிய கிராம சூழ் நிலையில். கோவிலைச் சுற்றி இருந்த அக்ரஹாரம் , அங்கு வசிக்கும் மக்களின் உபசரிப்பு அந்த ஊரை விட்டு புறப்படவே விடவில்லை . உள்ளே நுழைந்தவுடன் எங்களின் பரபரப்பை  பார்த்த கோவில் சிப்பந்தி கோவில் மூட இன்னும் நிறைய நேரமிருப்பத்தைச் சொன்னது எங்கள் மூச்சைக் கொஞ்சம் சீராகியது . கூட்டமே இல்லாத அமைதியான அதிகாலையில் கிடைத்த தரிசனம் இந்த மலை நாட்டு திவ்ய தேச தரிசன முயற்சிக்கு கிடைத்த நிறைவுப் பரிசாகவே கருத முடிந்தது.   கோவிலின் எதிரே அமைந்திருந்த அழகிய குளத்தைக் கண்ட பிறகு நகர்ந்த எங்கள் மன நிறைவு சொல்லி மாளாது.

THIRUVEN PARISAARAM
சென்ற காரும் இருந்த டென்க்ஷனில் ஒரு சக்கரத்தின் காற்றை இழந்தும் நாங்கள் திருவனந்தபுரத்தை  சௌகரியமாக  நண்பகலில் அடைய முடிந்தது.

அசர வைத்தது :  கேரளத்தின் பல மூலைகளில் பல கோலங்களில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் ;  நாம் இந்தக் காலத்திலும் அதி நவீன வாகனங்களிலும் போக சிரப் படும் இடங்களில்  நம்மாழ்வார் போன்றவர்கள் நடந்தே சென்று பாடல்கள் பாடி இருப்பது; இந்தக் கோவில்களில் இருக்கும் சுத்தம் ; எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் பாரம்பரியத்தைக் காக்கும் கோவில் நிர்வாகங்கள்;  மலை நாட்டு திவ்ய தேசங்கள் இதே மேம்பட்ட நிலையில் இன்னும் பல காலங்கள்  இருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் நன்றாகவே தெரிகிறது !

 திரும்பிப் பார்க்க வைத்த தருணங்கள்:   இந்தப் பக்கத்துக்கு கோவில்களின் நேரங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்ட தினசரி பயண ஏற்பாடு ; அநேகமாக எல்லா இடங்களிலுமே கிடைத்த, வயிற்றை பதம் பார்க்காத உணவு;  இவர்களுக்கே உரித்தான அதிகாலை பில்டர் காபி;  இப்படி எல்லாமே அமைந்தது பாக்கியமே.   நான் ஐந்து வருடங்களுக்கு மேலாக இவர்களுடன்  பயணப் பட்டுக் கொண்டிருப்பதால், ஸ்ரீ ஜானகி டூர்சின் அணுகுமுறையில் ஒரு நல்ல முதிர்ச்சியைக் காண முடிகிறது !

இது போன்ற தனி மனிதர்களால் அணுகுவதற்கே சிரமப்படும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் தான் ஸ்ரீ ஜானகி டூர்ஸ் போன்ற நிறுவனங்களின் சேவைகள் தனித்து நிற்க்கின்றன. வளர்ந்து வரும் போட்டிகளை உணர்ந்து தனித்துவமிக்க மேம்பட்ட சேவைகளை ஜனங்களுக்கு அளிக்கும் நிறுவனங்களுக்கு பரபரப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை !!