Saturday, October 5, 2013

கேள்விக்கென்ன பதில்

'முளச்சு மூணு இலையும் விடலே.." - முகேஷின் குரல், உள்ளத்தை உருக்கி ஊடுருவி சிந்தனையையும் தூண்டுகிறது .

குழந்தைக்கு ரெண்டு வயசாகறத்துக்கு முன்னாடி, இன்னும் சரியாகவே பேசக்கூட வருமுன், வாரக்கடைசீல டீ வீ பார்த்து, வழக்கமான தூக்கத்துக்குப் பின் பெற்றோர்கள்அதன் முன்னேற்றத்தையும், வருங்காலத்தையும் நினைக்கலாம் என்று ஆரம்பித்து, கவலையில் முடிக்கிறார்கள். சில வாரங்களுக்குப் பின் அதை ஏதாவது ஒரு ப்ளே ஸ்கூல்ல போட்றதுதான் சரி என்று ஒருவர் சொல்ல, பின் இருவரும் ஒரு மனதாகிறார்கள். வீட்ல இருக்கற ஒரு பாட்டிம்மா மட்டும் எதுக்கு இவ்வளவு சீக்கிரம் ஸ்கூல்னு கேட்டா, அப்பத்தான் அதுக்கு நல்ல பழக்கங்களெல்லாம் வருங்கரா. குழந்தையோ எங்க தூங்கினால் என்ன, எங்கு விளையாடினால் எனக்கென்ன என்று விவரமரியாமல் வலையில் விழுகிறது. அப்ப ஆரம்பிக்கரது இதுகளோட ஓட்டம்.

 ஸ்கூலுக்குப் போனபின் அவனக் கேக்காமலேயே சாயங்காலம் ஸ்பெஷல் க்ளாஸ்- ஏன்னா, அப்பத்தான் முத ரேங்க் எடுக்க முடியும்- மாலை க்ரௌண்டுல விளையாடுற கிரிக்கெட் பாதி போச்சு

ரிபோர்ட் கார்டு வந்தால், ஏன் முதல் இரண்டு ரேங்க் எடுக்கவில்லை என்ற கேள்விக்கணைகள், அதைப் பிடிக்க இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமென்று மாத்தி மாத்தி உபதேசம்- பையன் மனசுக்குள் நினைச்சுப்பான் "இந்த உபதேசம் கேட்கற  நேரத்தில், இன்னும் சில 5 மார்க் கேள்விகளுக்கு பதில்கள் படித்திருப்பேன் என்று".

ஒன்பதாவதிலுருந்து, அவன் இதுவரை நழுவி ஓடிக்கொண்டிருந்த விளையாட்டுக்கு ஒரு முழு முற்றுப் புள்ளி. ஐ. ஐ.டி கோச்சிங், இஞ்சினீயரிங் கோச்சிங்னு காலைல அஞ்சு மணிலேர்ந்து ராத்திரி பன்னெண்டு மணி வரை குழந்தையை பெண்டு எடுத்தபின், ஒரு வழியாக அவன் பீ.ஈ சேர்ந்ததில்தான் எத்தனை த்ருப்தி.

அதை முடித்து பாங்க் மானேஜரோட சண்டை போட்டு அவன் கழுத்துவரைக்கும் லோன் வாங்கி அமெரிக்காவுக்குப் புடிச்சுத் தள்ளியாச்சு. எம். எஸ் முடிந்தவுடன், அவன் இந்தியா திரும்பி வருவானா என்ற சின்ன நப்பாசையை வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளி " அந்த கொழந்தை அத்தனை கடனை அடைக்க என்ன பண்ணும். அங்கதான் வேலை பாக்கணும்"னு சமாதானப் படுத்தியாச்சு.

கொஞ்சம் கடனை அடைத்த பின் பையன் மூச்சு விட்டு, அமெரிக்காவில் வாங்கிய காருக்கும், வாங்கப் போற வீட்டுக்கும் ஏத்தபடி சம்பாதிக்கும்  ஒரு ரோஸியையோ, ஜூலியையோ கல்யாணம் பண்ணிண்டாக் கூட இப்பல்லாம் ஒத்துண்டுடறா. ஒரு  ரெடி மேட் கொசுவப் புடவையுடன் அங்கே போய் , பாப் தலை மருமகள் கொசுவத்துடன் இருக்கும் போட்டோவை ஃபேஸ் புக்குல போட்டாத்தான் ஒரு த்ருப்தி.

ஆனா புள்ள என்ன சொன்னாலும், பேரப் பிள்ளை மேல் அவ்வளவு ஆசை இருந்தாலும் பெரியவர் மட்டும் கங்காதீஸ்வரர் சன்னிதி ஓட்டு வீட்டை விட்டு வர மாட்டேங்குறார் என்பதில் மாமிக்குக் கொஞ்சம் வருத்தம் தான். இருந்தும் அடுத்து வரும் ஆறு மாசத்தை எண்ணியே இந்த ஆறு மாசத்தை ஓட்டரது ஒரு சுகம்னு பேச ஆரம்பிச்சுருக்கா.

எல்லாம் நல்லாப் போயிண்டு இருக்கப்போ, அப்பாக்கோ அம்மாக்கோ உடம்பு முடியலைன்னா, குழந்தைகள் பதறிப் போயிடறது. உண்மையாகவே மனசு தவித்தாலும், உடனே ஒடி வர முடியல்லை- ஆபீஸ் வேலை, லீவு, வீஸா, டிக்கெட் என்று பல தொல்லைகள்.

ஆனால் ஊருல இருக்குறவாளுக்கு என்ன , ஆளாளுக்கு, வாய்க்கு வந்த படி பேசரா- "ஆமாம் ஊருலெ இல்லாத வேலை; எல்லாம் அந்த சட்டக்காரி கொடுக்குர ஸ்க்ரூ, அவன் இனிமே எங்க வரப்போறான்"னு- அந்தக் கொழந்தை மனசு பட்ற பாடு யாருக்குத் தெரியும்.

இவ்வளவு பேசராளே, அந்தக் குழந்தையோட ஒரே ஒரு கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமா.

"நான் பாட்டுக்கு தேமேன்னு , புரசவாக்கம் சன்னதித் தெருல கோலி விளயாடிண்டு இருந்திருப்பேன். என்னப் போய் வலுக்கட்டாயமாய் இரண்டு வயசுலேர்ந்து ஸ்கூல்ல போட்டு, எல்லாத்தையும் படிக்க வச்சு, அமெரிக்காவுக்கும் அனுப்பிச்சேளே. யாராவது ஒரு வார்த்தையாவது என்னைக் கேட்டேளா. நான் அப்பா அம்மா என்னென்ன சொன்னாளோ, அதைத்தானே செஞ்சேன்- அதுதானே படிச்சேன். அது தப்பா"

தெரிஞ்சாச் சொல்லுங்களேன் !