Showing posts with label DivyaDesam. Show all posts
Showing posts with label DivyaDesam. Show all posts

Thursday, January 11, 2018

மானசீக திவ்ய தேச தரிசனம்

பல வருடங்களுக்கு முன்னமேயே மயிலாப்பூரை ஒரு 'happening place' என்று சொல்வர் என் நண்பர்கள் சிலர். மயிலையில் தான் சில சபாக்களில் நாடகங்கள் மேடையேறிக் கொண்டிருக்க, நடனங்கள் ஒரு புறம் அரங்கேற, அள்ளித்  தெளித்தாற் போல் மயிலை முழுதும் பரவிக் கிடைக்கும் கோவில்களில் உபன்யாசங்களும் பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளும் களை கட்டி ரசிகர்களை எங்கு போவது என்று முடிவு செய்ய முடியாமல் திணறும் காட்சிகளை வெகு சாதாரணமாக பார்க்க முடியும்.

இருபது வருடங்களுக்கு முன் நிலவிய அந்த நிலை இன்றும் - தொலைக்காட்சி,  உள்ளங்கையில் திரைப்படம், வலைத்தளங்கள் போன்ற கவர்ச்சிகளூடும் தொடர்ந்து இருப்பது வியக்க வைக்கும் சமாச்சாரமே. ஆனால் லஸ் கார்னரில் இருந்து கொண்டு பல நாட்கள் பிரயத்தனப்பட்டு பார்க்க வேண்டிய திவ்ய தேசங்களை மாதம் நான்காக இக்காலத்துக்கு ஏற்ப சுலப தவணைகளில் கொடுப்பது என்பதை நம்புவது கொஞ்சம் கடினமே . இதைத்தான் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகேடமி  கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்துடன் இணைந்து  சில காலமாக செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகிலுள்ள ஒரு சிறிய, ஆனால் அழகிய அரங்கில் பொது மக்களை வரவேற்று விடா ப்பிடியாக கையில்  சுடச்சுட   ஒரு கோப்பை தேநீரையும் கொடுத்து,  இலவசமாக மூன்றோ அல்லது நான்கு திவ்ய தேசங்களுக்கோ  ஞான திருஷ்டியிலேயே அழைத்து செல்கிறார்கள்.

இந்த திவ்ய தேச விருந்துக்கு நடுவே  இங்கு நடக்கும் மற்றுமொரு   போட்டியிலும் மக்கள்  திணறுகிறார்கள்.  ஆம் , ஒவ்வொரு திவ்ய தேசத்தின் கதையையும் சிறப்புகளையும் தகுந்த ஆதாரங்களோடு முனைவர் சுதா சேஷய்யன் விளக்க அந்தந்த திவ்ய தேசங்களின்  பெருமை சொல்லும் பாடல்களையும் சுத்தமான கர்நாடக இசையாக  பக்க (கா) வாத்தியங்களுடன் கொடுக்கும் திருமதி வசுந்தரா ராஜகோபால் அவர்களின் குரல் வளம் 'சபாஷ் சரியான போட்டி' என்று கண் மூடி அனுபவிக்க வைக்கிறது.


இன்று நடந்த சொற்பொழிவில் எப்படி :

  • அரிமேய விண்ணகரம் என்ற திவ்ய தேசத்தில் கண்ணன் கோவர்த்தன கிரியை தூக்கும் பொழுது தன் சுண்டு விரலில் அம்மா போட்ட ராக்ஷா ரஸம் (இக்கால நகப்பூச்சு)  அழிந்து போய்விட்டதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டது ; 
  • திருவண் புருடோத்தமன் மக்களுக்கு நன்மை அளிக்க, தான் பழியைச் சுமந்தது, மற்றும் அழும் குழந்தைக்கு அன்னை பராசக்தியே நேரில் வந்து பாற்கடலையே பாலாகக் கொடுத்து பசியை தீர்த்தது ; 
  • திருத்தெற்றியம்பலம் என்னும் திவ்ய தேச விஜயத்தால் உலகையே ஆளும் வாய்ப்பும் கிட்டும் (இன்னும் நம்ம உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு  இது தெரியாது போல! ) ; 
  • திரு அனந்த புரம் என்ற திருவனந்தபுர பெருமாள் 12000 சாளக்கிராமத்தை மேல்  சயனித்திருப்பது  
        போன்ற அருமையான செய்திகளை எளியவர்களுக்கும் புரியும் படியான சொற்களில் உரைத்த மருத்துவருக்கு எவ்வளவு ஷொட்டு கொடுத்தாலும் மிகையாகாது . இருந்தாலும் அவருக்கு ஈடு கொடுத்து தேனாய் இசைத்த  வசுந்தரா அவர்கள் மிக அருகிலே அதே உயரத்திலேயே இருப்பது நமக்கு இரட்டை விருந்து .

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நான் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த உபன்யாச உரையை அனைவருக்கும் பகிர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்,  இதுவரை பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களைக் பார்த்து விட்டதாகவும் இன்னும் மீதமிருக்கும் விண்ணுலகில் உள்ள இரண்டு   திவ்ய தேசத்துடன் இந்நிகழ்ச்சி முடிவடையும் என்று அறிவித்தது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

ஆனால் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இது போன்ற சிறந்த சொற்பொழிவுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கும் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகேடமியால் சும்மா இருக்க முடியாது என்றே தோன்றும் எனக்கு  . கூடிய விரைவில் மற்றுமொரு விருந்தை படைக்க அந்த பெருமாளே  அவர்களுக்கு  அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அந்த நல்ல உள்ளங்களை  வாழ்த்துவதில்  எந்த தயக்கமுமில்லை !

Sunday, December 24, 2017

மலைக்க வைத்த மலை நாட்டு திவ்ய தேசங்கள்

போன டிசம்பர் (2016) மாதத்தின் 'ஐந்து நாட்களில் நாற்பது சோழ நாடு திவ்ய தேச தரிசனத்தின்'  இனிய நினைவுகள் இன்னும் மறவாத நிலையில், ஸ்ரீ ஜானகி டூர்ஸ் அனைத்து கேரள மலை நாடு திவ்ய தேசங்களையும் நான்கு நாட்களில் பார்க்கப் போவதாக அறிவித்தவுடன் 'உள்ளேன் ஐயா' என்று கையைத் தூக்கி பந்திக்கு முந்திக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை இன்று , பயணம் முடிந்தவுடன் நினைவு கூர்ந்து பார்ப்பதில் பெருமையும் இனிமையும் மேலோங்கி நிற்கிறது .

கேரள விஜயம் இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் போன்று அதற்க்கென்று நிறைய முன்னேற்பாடுகள் தேவை. அங்கு வழக்கமாக கிடைக்கும் கொட்டை அரிசியை சமாளிக்க வேண்டும் , கையில் விரலுடன் சேர்த்து எப்பொழுதும் குடையும் இருக்க வேண்டும். முக்கியமாக அதிகாலை எழுந்திருக்க  பழக்க வேண்டும் ஏனென்றால் அங்குள்ள அநேக கோவில்களை நான்கு மணிக்குத் திறந்து சீக்கிரமே நடை சார்த்தி , உம்மாச்சியை தட்டி தாச்சி தூங்க வைத்து விடுவார்கள்.  அதிகாலை இயற்கை உபாதைகளுக்கு கூடுதலாக ஒன்றிரண்டு மலை வாழைப் பழங்களை உள்ளே தள்ள வேண்டும் ; ஜானகி   டூர்சில் அந்த பயம் தேவையில்லை - ரமேஷ் அதிகாலை நான்கு மணிக்கு கூட சுடச் சுட பில்டர் காபி கொடுத்து விடுகிறார் !! இப்படி அவரவர்கள் தங்கள் உடல்கூற்றுக்கு ஏற்ப தயார் செய்து கொள்வது முக்கியம் . ஆனால் இருந்த கழுத்தளவு வேலைகள் நடுவே மேற்கூறிய எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் தைரியமாக திருவனந்தபுரம் மெயிலில் ஏறி உட்கார்ந்தவுடன் வரவேற்றது அருமையான இட்டிலிகளும் தயிர் சாதமும் !

சரியாக ரயில் டிக்கெட் கூட வாங்காத சில கருப்பு உடை அணிந்த பக்தர்கள் ( ஒரே படுக்கையில் விளக்கு அணைத்தவுடன் இருவர் படுத்திருந்தனர்) , தாங்கள் என்னவோ ரயிலையே விலைக்கு வாங்கி விட்டதாக நினைத்து போட்ட ஆர்ப்பாட்டம் . . . . மசாலா நெடி எல்லோரையும் கைக்குட்டையை நோக்கி ஓட வைத்த தின் பண்டங்கள் , மூன்று பேர் உட்கார வேண்டிய இடத்தில் ஐந்து பேர், எல்லோரும் படுத்து விளக்கை அணைத்தவுடன் செல் போனில் உரத்த ஒலியில் பக்தி பாடல்கள் - இந்த எல்லா உபத்திரவங்களை மீறி எதோ தூங்கி காலை ஐந்து மணிக்கு திருச்சூரை அடைந்தவுடன்  குளிர்ந்த காலையும்  சிரித்த முகத்துடன் வரவேற்ற வேன்  ஓட்டுனரும் நம்பிக்கையை  கூட்டினர் .

நாள்-2 (20-Nov-2017) :

அருமையான ஹோட்டலில் ஒரு நல்ல வெந்நீர் குளியலுக்குப் பின் துவங்கிய யாத்திரை இரிஞ்சாக்குடா என்ற நாலம்பலங்களில்  ஒன்றான   க்ஷேத்திர விஜயத்துடன்தொடங்கியது . நாலம்பலம் என்பது கேரளத்தில் ஸ்ரீ ராமர் சகோதரர்களுக்கான உள்ள நான்கு கோவில்கள். இதில்   இரிஞ்சாக்குடா   பரதன் கோவில்.

IRUNJALAKUDA
அடுத்து போனது சத்ருக்ன சுவாமியின்  பாயாமல்   என்ற திருக்கோவில்.  அநேகமாக எல்லா கேரளக் கோவில்களை போல் இதுவும் படு சுத்தமாக , அமைதியுடன் ஒரு ரிசார்ட் போன்ற அமைப்பின் நடுவே அழகிய பெருமாள் அரையிருட்டில் பல கேரள விளக்குகளின் ஒளியூடே அற்புதக் காட்சி அளித்தார்.

PAAYAAMMAL
பின் விரைந்த ஸ்ரீ ராமரின் த்ரிபரையார்   என்ற கோவில் முகப்பே வெகு அழகாக நம்மை வரவேற்கும். ஒரு திரைப்பட செட் போன்ற வண்ணக் கூரையைத் தாண்டியவுடன் வெகு பவ்யமாக வணங்கும் ஹனுமனை ஸ்ரீ இராமரின் பார்வையிலேயே கருணையைப் பொழியும் ஒரு சித்திரம் பக்தியை பன்மடங்கு தூண்ட வல்லது.  வெடி வெடித்து நேர்த்திக்கடனை செலுத்தும் இத்தலத்தின் பின்புறம் ஓடும் ஆறு ஒரு அருமையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது. கோவிலுள் ஜொலித்த கேரள விளக்குகளும் , வண்ணக் குடையும் ஆற்றைச்சுற்றி நிற்கும் தென்னைகளும் , நீங்கள் கேரளத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யும்.

TRIPAAYAR
அதி வேகமாக வந்தும் வடக்குநாதன் கோவில் மூடி விட்டதால் அதன் எதிரே உள்ள 'படான்ஸ்' உணவகத்தின் மதிய உணவு கொடுத்த கோழி தூக்கத்திற்குப் பிறகு சென்றது 'திருநாவாயா' (1) என்ற திவ்ய தேசம். பரதப்புழா  என்ற ஆற்றின் கரையில் அமைந்திருக்கும்  நவமுகுந்தனின்     இந்தத் திருக்கோவிலின் அழகு இங்கு உங்களை புகைப்படம் எடுக்காமல் நகர விடாது .

THIRUNAVAYA
கார்த்திகை இருள் அதி விரைவில் சாலைகளை கவர்ந்து கொள்ள பின் சென்ற  ' திருவித்வக்கோடு ' (2)  , ஒரு மிகப் பழமையான திவ்ய தேசம். இன்னும் சில நிமிடங்களே மூடுவதற்கு இருந்த நிலையில் துளி ஒளி கூட இல்லாத நிலையிலும் அநேகமான மூத்த குடிமக்களே இருந்த எங்கள் குழு அந்த முக்கால் இருட்டிலும் எந்தத் தயக்கமும் இல்லாமல் விரைந்ததற்கான ஒரே காரணம் இந்தச் சூழலில் அமர்ந்திருக்கும் பெருமாளை தரிசித்தே தீர வேண்டும் என்ற வைராக்யமாகத் தான் இருக்க வேண்டும்.  நகுல சஹாதேவனுக்கு சந்நிதிகள் உள்ள , முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஒரு உகந்த இடமாகக் கருதப்படும் இந்தத் திருத்தலத்தில் , நாம் அதி வேக வேனில் வந்தும் கஷ்டப்பட்டதாகப் புலம்பும் பொழுது அந்தக் காலத்தில் நடந்தே வந்து மங்களாசாசனம் பாடிய குலசேகராழ்வாரை நினைத்து  கை கூப்பாமல்  இருக்க முடியவில்லை .

THIRUVITHVACODE
நாள்-3 (21-Nov-2017) :

நடந்த நடைக்கும் கவர்ந்த மைல்களுக்கும் தங்க வைத்த இடத்தின் ஏ.சி கொடுத்த சுகத்தில் தூக்கம் தானாக வந்து மட்டையாகிப் போக,  நான்கு மணி அலாரம் தான் நித்திரையைக் கலைக்க உதவியது. அதிகாலை தரிசனமாக 'திருமூழிக்குளம்' (3) என்ற லட்சுமண சுவாமி கோவில் திவ்ய தேசமட்டுமின்றி நாலம்பத்திலும் ஒன்றாகும். அதிகாலையிலேயே போனதால் கேரளக் கோவில்களுக்கே உரித்தான 'சீவேலி' என்ற பிரதக்ஷணங்களையும் காண முடிந்தது. பெரிய கோவிலின் சுற்றி உள்ள நூற்றுக் கணக்கான விளக்குகளை எப்பொழுது, எப்படி ஏற்றுவார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

THIRUMOOZHIKULAM
அடுத்துச் சென்ற 'திருக்காக்கரை' (4) என்ற மக க்ஷேத்திரம் இரண்டு  கோவில்களை கொண்டது. முகப்பில் இருந்த வாமன அவதார சிலையும் கோவிலைச் சுற்றி போடப்பட்டிருந்த வண்ண மயமான தரையும் , காலை நடை பயிற்சி போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களின் தாபத்தைத் தணித்து அழகிய புகைப்படத்தையும் ஞாபகார்த்தமாக கொடுத்து அனுப்பி வைத்தது.

THIRUKAAKARA
பாஷை பரிச்சயமில்லாத தேசத்தில் வண்டி ஓட்டுனரின் 'இதோ இதோ' என்ற உறுதியை நம்பித்தான் பயணிக்க வேண்டி இருக்கிறது . ஓட்டுனரின் இந்த உறுதி மொழி இம்முறை சற்றே ஏமாற்றத்தை அளிக்க விரைவாக சிந்தித்த பயண மேலாளர் விடாமல் பிடிவாதமாக கூடவே ஓடி வரும் சிறிய ஓடையின் அழகில் மயங்கி வண்டியை நிறுத்தி ஆலப்புழாவிற்க்கே பிரபலமான  ஒரு படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தது அன்னாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் !  மிகக்  குறைந்த செலவில் ஏறக்குறைய ஒரு மணி நேர படகு சவாரி அனைவரையும் பசி மறந்து ரசிக்க வைத்தது.  கேரளத்துக்கே உரிய தென்னைகள் தலை குனிந்து ஓடும் தண்ணீரை முத்தமிட முயல , அமைதியாக நீந்திக் கொண்டிருந்த வெள்ளை நாரைகளும் சில கருப்பு வாத்துகளும்  பயந்து  சிறகடிக்க  குழுவினர் பாய்ந்து பாய்ந்து கேரள அழகை கைப்பேசியின் சொல்ப மெகா பைட்டுகளில் முடக்க முயன்று வெற்றியும் பெற்றனர் .

ALLEPPEY_BOATING
அற்புத படகு சவாரிக்குப்  பின் விரைந்த திருக்கொடிதானம் (5) என்ற திவ்ய தேசம் ஒரு நல்ல சாப்பாட்டிற்கு பின் சிறிது கண் அசர முயன்றவர்களை ஒரு தீடீர் மழையால் எழுந்து அமர வைத்தது . பெருமாளே வந்தாலும் கேரளக் கோவில்கள் உரித்த நேரத்தில் தான் திறப்பார்கள்.

THIRUKADITHAANAM
பொறுமையாக இருந்ததற்கு கிடைத்த அறிய பரிசான  அருமையான  சாயரக்ஷை தரிசனத்திற்குப் பிறகு கிடைத்த ரமேஷின் சுடச் சுட காபி மக்களை மட்டும் ஊக்குவிக்காமல் ஓட்டுநரையும் உசுப்பியதில் ஆக்சிலேட்டர் மேல் வைத்த காலை எடுக்க மறந்ததால் ஆரண்முழா பார்த்தசாரதி (6) கோவிலான அடுத்த திவ்ய தேசத்தை விரைவாகவே அடைய முடிந்தது.

ARANMULA
இந்த ஓட்டம் போதாது இன்னும் சில நிமிடங்களில் அடுத்த திவ்ய தேசமான  திருவள்ளா (7) மூடி விடுவார்கள் என்று பயமுறுத்தியதால் எவ்வளவு விரைந்தாலும் ஒரு சிலரே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. சீவேலி தொடங்கியதால் அங்கு இருந்த பட்டர் அறிவுரையின் பேரில் பொறுமையாக காத்திருந்ததில் மீதமிருந்த சிலரும் தரிசனம் செய்து கொள்ள அனைவரும் திருப்தியாக வாசலில் இருந்த தங்க தூண் அருகே சில புகைப் படங்களுக்குப் பின் சந்தோஷமாக மசால் தோசை சாப்பிட ஹோட்டல் திரும்ப முடிந்தது .

THIRUVALLA
நாள்-4 (22-Nov-2017) :

 திருவள்ளாவில் இருந்த ஹோட்டல் தங்குவதற்கு அருமையாக இருந்தாலும் அதிகாலையில் வெந்நீர் கொடுக்காமல் படுத்தி எடுக்க, சிலர் கிளம்ப வேண்டிய நேரத்திலும் துண்டைக் கட்டிக்க கொண்டு குளிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க நேரம் பறந்தது. கொடுத்த காலை உணவு நன்றாக இருந்தாலும் வெந்நீர் கடுப்பில் ஆளாளுக்கு கவுண்டரில் இருந்த நேற்றுத்தான் வேலைக்கு சேர்ந்திருந்த பெண்ணை வறுத்து எடுத்த திருப்தியில் கிளம்பினார்கள் .

அடுத்து சென்ற திருவண்வண்டூர் (8) என்ற நம்மாழ்வார் பாடிய இந்த திவ்ய தேசம் காலை நேரத்தில்   அருமையாக இருந்தாலும் எந்த மஹாநுபாவனோ  தரையை சரியாக பாவாமல் சிறிய கற்களை போட்டு நிரப்பி இருந்ததால் அனைவரும் கொஞ்சம் நொண்டி அடித்துக் கொண்டே  விரைந்தார்கள் .

THIRUVANVANDUR
அடுத்து விரைந்த திருச்சிற்றாறு (9) என்ற திவ்ய தேசம் ஒரு சிறிய , ஆனால் அழகிய கோவில். கூட்டமே இல்லாத அமைதியான காலையில் ஒரு மன நிறைவான தரிசனம் .

THIRUCHITTAARU
பின் சென்ற திருப்புலியூர் (10)  , ஒரு மிகப் பெரிய அழகான கோவில். கோடைகால விடுதி போல பராமரிக்கப் படும் இந்த இடத்தில் உள்ள பீமனின் பெரிய கதை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பெரிய ஈர்ப்பு.  இதனருகில் நின்று புகைப் படம் எடுக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வளவு பரபரப்புகளுக்கு நடுவே சில உள்ளூர் பக்தர்கள் அமைதியாக பாடிக்கொண்டிருந்தார்கள் !!

THIRUPULIYUR
பக்கத்திலிருந்த த்ரிப்போரூர் முருகன் கோவில், திவ்ய தேசமாக இல்லா விட்டாலும் , இந்த சுற்றுலாவில் கிடைத்த ஒரு நல்ல போனஸ். இந்த எளிய கோவிலில் இருந்த சில அறிய சிற்பங்கள் அதிசயிக்க வைத்தது .

THRIPORUR
பின் திருவனந்தபுரத்திற்கு  வந்த நீண்ட பயணம் நல்ல வாநிலையாலும் , நடுவில் எல்லோரும் சுவைத்த ஐஸ்க்ரீமினாலும்  சற்றும் சிரமம் தெரியாமல் அமைந்தது.

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் (11) தரிசனம் என்றுமே கொஞ்சம் பரபரப்பானது தான். ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் , வேட்டியைத் தவிர எதற்குமே அனுமதி கிடையாது- போதாக் குறைக்கு மாலை வேளையில்  உடனுக்குடன் கதவைச் சாத்தி விடுவார்கள். டிசம்பர் மாதத்தில் இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களின் கூட்டம் வேறு. இவை அனைத்தும் இருந்தும் இந்த முறை கிடைத்த தரிசனம் அருமை. எடுத்துச் சென்ற விஷ்ணு ஸஹஸ்ரநாம புத்தகத்தை திறப்பதற்குள் தரிசனம் நிறைவடைந்திருந்தது . வெளியே வந்ததும் மீண்டும் உள்ளே சென்று கிட்டிய  தரிசனம் தான் கூடுதலான ஊக்க போனஸ் !

ANANTHA PADMANABHA SWAMY
பெரிய கோவிலில் நிறைவான தரிசனம்,  ஸ்ரீ ஜானகி டூரின் சொன்ன எல்லா திவ்ய தேசங்களும் நிறைவடைந்திருந்த ஒரு நிம்மதி கலந்த பெருமூச்சு அனைவரிடமும் தெரிந்தது. அருகிலுள்ள சிப்ஸ் கடைக்கு சில ஆயிரங்களைக்  கொடுத்து விட்டு எடுத்துச்சென்ற  பெட்டியின் அளவைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் சிப்ஸ் பொட்டலங்களை அள்ளிக் கொண்டு நடந்தே வந்து அருகிலுள்ள இந்தப் பகுதியில் மிகப் பிரபலமான மிலிட்டரி விநாயகரின் கூட்டமிருந்தும் நிறைவான தரிசனம்.

MILITARY VINAYAGAR
தினத்தின் , சுற்றுலாவின் கடைசி தரிசனமாகக் கிடைத்தது , சக்தி வாய்ந்த உலக சாதனைகளில் கூட்டத்திற்காக இடம் பிடித்திருந்த  ஆற்றுக்கால் பகவதி  கோவில் .

AATRUKAAL BAGAWATHY
நாள்-5 (23-Nov-2017) :

ஸ்ரீ ஜானகி டூர்சில் சொன்னது என்னவோ கேரளத்தில் உள்ள பதினொன்று திவ்ய தேசங்கள் தான்  - சொன்னபடி அவைகளை திவ்யமாக தரிசிக்க வைத்து கடமையை முடித்து சொன்ன சொல்லைக்  காப்பாற்றியும் விட்டார்கள்   ஆனால் மலை நாடுகள் திவ்ய தேசம் மொத்தம் பதிமூன்று. மீதமிருந்த இரண்டு திவ்ய தேசங்கள் தமிழ் நாட்டில் இருந்ததாலோ என்னவோ அவைகள் இந்த பட்டியலில் சேர்க்கப் படவில்லை. ஆனால் மீண்டும் நாகர்கோவில் அருகிலுள்ள இந்த இரண்டு திவ்ய  தேசங்களுக்கும் எடுத்து கூட்டிக் கொண்டு வருவது சிரமமென்பதால் திருவனந்தபுரத்தை சுற்றிப் பார்க்கக் கொடுத்திருந்த கடைசி நாளை நான் இந்த இரண்டு திவ்ய தேசங்களையும் பார்க்க செலழிப்பதாக முடிவு செய்திருந்தேன் .

ஹோட்டல் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரத்யேக காரில் கிளம்பிய நான்கு பேர் குழு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது பெருமாளை தரிசிப்பதிலேயே குறியாக இருந்தது அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து நான்கு மணிக்கு கிளம்பியதிலேயே தெரிந்தது.

கொஞ்சம்  தேவைக்கு அதிகமாகவே டென்க்ஷன் இருந்தததற்குக் காரணம் யாருமே இந்த இரண்டு கோவில்களின் நடை திறப்பு விவரங்களை சரியாக சொல்லாததுதான். இருந்தும் அதிகாலையிலேயே கிளம்பியதால் கிட்டத்தட்ட ஆறேகால் மணிக்கே திருவட்டாறு (12)  திவ்ய தேசத்தை அடைந்தது , நிம்மதியை அளித்தது. கோவிலில் பாலாலயம் நடந்து கொண்டிருந்தாலும் திடீரென்ற அங்கு வந்த ஒருவர் எங்களை கூட்டிச் சென்று புதிதாக வடிவமைக்கப் படும் சயனப் பெருமாளை, அவரது நீண்ட விரல்களை, ப்ரத்யேகமாகக் காண உதவியது சிலிர்க்க வைத்தது.

THIRUVATTARU
மிக அருகிலேயே இருந்த திருப்பதிசாரம் என்றழைக்கப்படும் திரு வெண்பரிசாரம் (13) என்ற திவ்ய தேசம் அமைந்திருந்தது ஒரு சிறிய கிராம சூழ் நிலையில். கோவிலைச் சுற்றி இருந்த அக்ரஹாரம் , அங்கு வசிக்கும் மக்களின் உபசரிப்பு அந்த ஊரை விட்டு புறப்படவே விடவில்லை . உள்ளே நுழைந்தவுடன் எங்களின் பரபரப்பை  பார்த்த கோவில் சிப்பந்தி கோவில் மூட இன்னும் நிறைய நேரமிருப்பத்தைச் சொன்னது எங்கள் மூச்சைக் கொஞ்சம் சீராகியது . கூட்டமே இல்லாத அமைதியான அதிகாலையில் கிடைத்த தரிசனம் இந்த மலை நாட்டு திவ்ய தேச தரிசன முயற்சிக்கு கிடைத்த நிறைவுப் பரிசாகவே கருத முடிந்தது.   கோவிலின் எதிரே அமைந்திருந்த அழகிய குளத்தைக் கண்ட பிறகு நகர்ந்த எங்கள் மன நிறைவு சொல்லி மாளாது.

THIRUVEN PARISAARAM
சென்ற காரும் இருந்த டென்க்ஷனில் ஒரு சக்கரத்தின் காற்றை இழந்தும் நாங்கள் திருவனந்தபுரத்தை  சௌகரியமாக  நண்பகலில் அடைய முடிந்தது.

அசர வைத்தது :  கேரளத்தின் பல மூலைகளில் பல கோலங்களில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் ;  நாம் இந்தக் காலத்திலும் அதி நவீன வாகனங்களிலும் போக சிரப் படும் இடங்களில்  நம்மாழ்வார் போன்றவர்கள் நடந்தே சென்று பாடல்கள் பாடி இருப்பது; இந்தக் கோவில்களில் இருக்கும் சுத்தம் ; எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் பாரம்பரியத்தைக் காக்கும் கோவில் நிர்வாகங்கள்;  மலை நாட்டு திவ்ய தேசங்கள் இதே மேம்பட்ட நிலையில் இன்னும் பல காலங்கள்  இருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் நன்றாகவே தெரிகிறது !

 திரும்பிப் பார்க்க வைத்த தருணங்கள்:   இந்தப் பக்கத்துக்கு கோவில்களின் நேரங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்ட தினசரி பயண ஏற்பாடு ; அநேகமாக எல்லா இடங்களிலுமே கிடைத்த, வயிற்றை பதம் பார்க்காத உணவு;  இவர்களுக்கே உரித்தான அதிகாலை பில்டர் காபி;  இப்படி எல்லாமே அமைந்தது பாக்கியமே.   நான் ஐந்து வருடங்களுக்கு மேலாக இவர்களுடன்  பயணப் பட்டுக் கொண்டிருப்பதால், ஸ்ரீ ஜானகி டூர்சின் அணுகுமுறையில் ஒரு நல்ல முதிர்ச்சியைக் காண முடிகிறது !

இது போன்ற தனி மனிதர்களால் அணுகுவதற்கே சிரமப்படும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் தான் ஸ்ரீ ஜானகி டூர்ஸ் போன்ற நிறுவனங்களின் சேவைகள் தனித்து நிற்க்கின்றன. வளர்ந்து வரும் போட்டிகளை உணர்ந்து தனித்துவமிக்க மேம்பட்ட சேவைகளை ஜனங்களுக்கு அளிக்கும் நிறுவனங்களுக்கு பரபரப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை !!

Saturday, January 14, 2017

சோழ நாட்டு திவ்ய தேச தரிசனங்கள் - 2016

 'உண்மையான காதல் என்றுமே சுலபமான பாதையில் செல்வதில்லை' என்று சொல்லுவார்கள் (The path of true love never runs smooth) .

என்னளவில் அது எல்லாவற்றுக்குமே பொருந்தும். ஒரு மிகச் சாதாரணமான காரியமாக இருந்தாலும் , கொஞ்சம் நம்மைச் சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கும். முடிவில் நன்றாகவே நடக்கும் என்ற அனுபவத்தினால் தான் இதனைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது.

இப்படித்தான் மிகத் துல்லியமாக ஏரியா வாறாக ஜானகி டூர்ஸின் ரமேஷ் அனுப்பிய குறுஞ்செய்திப்படி அதிகாலை 4 : 45 க்கே தயாராக இருந்தும், நாங்கள் பயணிக்கப் பட வேண்டிய வேனுக்கு முன் இன்னொரு மஹாநுபாவன் வண்டியை நிறுத்தி விட்டு ஏதோ டீ வீ சீரியல் பார்க்கப் போயிட்டார் போல- மணி ஏழாகியும் கிளம்பிய பாடில்லை. டென்க்ஷன் விண்ணை முட்டி மஹாவிஷ்ணு என்னவென்று மேலிருந்து எட்டிப் பார்த்ததெல்லாம் ஒன்றுமே அறியாத ரமேஷ் அலை பேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டே மந்தைவெளி நாற்சந்தி நடுவில் அலைந்ததைக் கண்டு மனமிரங்கிய பெருமாள் ஒரு வழியாக எட்டு மணிக்கு பயணம் தொடங்க வழி செய்தார். இருந்தாலும் தனுர் மாதத்தில் பெருமாளை நாற்பது திவ்ய தேசங்களில் தரிசனம் செய்ய விழைந்த பதினாறு புண்யாத்மாக்களைச் சுமந்து கொண்ட வண்டி தாம்பரம் தாண்டிய பின் தான் ரமேஷுக்கு கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்க கொள்ள முடிந்தது. என்னைப் போல் வண்டியினுள் இருந்தவர்களுக்கு இந்தக் கவலையும் இல்லை -ஏனென்றால் எங்கள் கண்களுக்கு ரமேஷ் அந்தத் தேரோட்டிக் கண்ணனாகத் தெரிந்ததால் கவலையை அவனிடத்தில் விட்டு விட்டு காலை மூன்று மணிக்கே எழுந்ததில் கண்கள் சொருக கொஞ்சம்  சாய்ந்து அமர்ந்து கொண்டவுடன் தட்டி எழுப்பி  ஒரு வெறியோடு அருமையான காலை உணவு கொடுத்த ரமேஷ் அப்போது எங்களுக்கு கடோத்கஜனாகவே தெரிந்தார்.


முதல் நாளே நெய்வேலியில் ஒரு நல்ல மதிய உணவு கிடைத்தாலும் , மாலை நான்கு மணி வரை கொஞ்சம் மந்தமாகவே நகர்ந்து கொண்டிருந்த பயணம் சீர்காழியை அடைந்தவுடன் திடீர் உத்வேகம் பெற்றது. அந்த மாலையில் திருவாலியில் தொடங்கிய திவ்ய தேச தரிசனங்கள், நடுவில் திருநகரியில் மக்கள் சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்த பொழுது  ரமேஷ் கலக்கிய ஸ்பெஷல் காப்பியால் உந்தப்பட்டாலும் ,  இரவினுள் எந்தவித அதிக சிரமமில்லாமல் பதிமூன்று க்ஷேத்திரங்களைக் கண்டது அதிசயமே. அலைந்த உடம்பிற்கும் நிரம்பிய மனதுக்கும் , மறுநாள் இதைவிட மோசமான நீண்ட தூர பயண எண்ணத்துக்கும் ஆறுதலாக இருந்தது வசதியான மாயூர அறை.



ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின் இரண்டாம் நாள் விடிகாலை தரிசித்த 'திரு இந்தளூர்' ராஜ கோபுரமே ஒரு கம்பீரத் தோற்றமளித்தது. திருப்பள்ளி எழுச்சி பாடி பெருமாளை எழுப்பி ஆசி வாங்கிய பிறகு சென்ற 'தேரழுந்தூர்'  கோவில் தோற்றமே ஒரு தெய்வீகமாக தக தகவென்று  மிளிர்ந்தது.

எவ்வளவு அவசரமாக ஓடினாலும் , திவ்ய  தேச பட்டியலில் இல்லா விட்டாலும் பார்க்கலாம் என்று தீர்மானித்த மயூரநாதர் கோவிலில் அம்மனை மட்டும் தான் தரிசிக்க முடிந்தது. ஆனால் அங்கு கண்ட 1928ஆம் ஆண்டு தேதியிட்ட  ஒரு கல்வெட்டு அதிசயிக்க வைத்தது .


மதிய உணவுக்கு  பெரிய பெயரை நம்பிப் போன ஹோட்டல் உணவின் தரத்தில் ஏமாற்றினாலும் சில நல்ல புகைப் படங்கள் எடுக்க உதவியது.




அடுத்துச் சென்ற 'திருக்கண்ணபுரம்' என்ற அருமையான திவ்ய தேசத்திற்கு சீக்கிரம் போனதால் கோவில் எதிரிலுள்ள பெரிய குளக்கரையில் அமர்ந்த நேரம் மறக்க மறுக்கும்   மணித் துளிகள்.

சாய ரட்சையில் திருநாகையில் கண்ட சௌந்தர ராஜப்  பெருமாள் தரிசனம் என்றும் இனிக்கும் .

அடுத்துச் சென்ற 'திருக்கண்ணங்குடி' யில் திவ்ய தீபாராதனை காட்டிய குருக்களின் தாயில்லாப் பெண் படிக்க பணம் கொடுக்க முடியாது கஷ்டப் படுவதைக் கேட்ட பொழுது அதே நாராயணனிடம் கொஞ்சம் அதிகமாக அந்தப் பெண்ணுக்கும் சேர்த்து வேண்டிக் கொள்ளத்தான் முடிந்தது. என்ன சாபமோ தெரியவில்லை, மதிய உணவுக்கு ஏமாற்றப் பட்டது போலவே, இரவு களைத்து த(தூ)ங்கப் போன திருவாரூர் ஹோட்டலிலும் ரூம் இல்லை என்று டென்க்ஷனை கூட்டி அந்த நாளை முடித்தார்கள்.

 மீண்டும் விடிய விடிய எழுந்து சில கோவில்களை பார்த்த மூன்றாம் நாளில்  கண்ட திருவாரூர் தியாகேசர் கோவில் ஒரு அதிகாலை அற்புதம்.



கமலாலயத்தின் முன் நின்று சில நிமிடங்கள் அந்த தனுர் மாதக்காலையின் குளிர்ந்த காற்றை அனுபவித்தது என்று நினைத்தாலும் ஜில்லென்று இ(னி)ருக்கும்  . ஒரு அருமையான காலை சிற்றுண்டிக்குப் பிறகு  தொடர்ந்த பயணம் மற்றுமொரு பிரம்மாண்டமான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலுக்கு.



குழந்தை கிருஷ்ணனை மடியில் ஒரு நொடி சுமந்த மன நிறைவுடன் சென்றது கும்பகோணம் சாரங்கபாணி கோவில்.  இப்படிப்பட்ட நெருக்கமான பயண அட்டவணையில் கிடைப்பதற்கு அறிய சில நிமிட மதிய ஒய்வு குடந்தை 'பாப்பி' ஹோட்டலின் இதமான சூழ்நிலையில் கிடைத்தது.

சீக்கிரம் வந்தே பழக்கப்பட்ட இந்தக் குழுவுக்கு நாச்சியார் கோவிலில் கிடைத்த பரிசு அங்குள்ள புகழ் மிக்க பாவை விளக்கு வாங்கக் கிடைத்த கொஞ்ச நேர அவகாசம். அதன்பின் பார்த்த ஒப்பிலியப்பன் கோவிலில் கிடைத்த கூட்டமில்லா தரிசனம் ,  ஒரு ஆச்சரியம் தான் . அடுத்து பயணப்பட்ட நாதன் கோவில் என்றழைக்கப்படும் திருநந்திபுர விண்ணகரம் என்ற சிறு கிராமத்தை அடைவதற்குள் ஒரு த்ரில்லர் படத்தில் உள்ள எல்லா உணர்வுகளும் கிடைத்தது . மிகக் குறுகிய சந்துகளில் புகுந்து சென்ற எங்கள் வண்டியை சரியாக வழிகாட்ட யாருமில்லாத போதும், பெரிதும் நம்பிய கூகிள் மேப் கை விடவில்லை. சில திகில் நிமிடங்களுக்குப் பின் பார்த்த 'நாதன் கோவிலோ ' அற்புதமான ஒரு அழகிய கோவில் .

மூன்று நாட்களின் கடுமையான சுற்றுப் பயணம் உடலில் தெரிய ஆரம்பித்தாலும், பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு உந்தியதே இரவு நன்கு தூங்க உதவிய சௌகரியமான விடுதிகள் , அதிகாலை காபி மற்றும் முக்கியமாக பார்த்துக் கொண்டிருக்கும் சில அறிய திவ்ய தேசங்கள். இப்படியாக நான்காம் நாள் அதிகாலை எழுந்து கும்பகோணத்திலிருந்து சுமார் 45 நிமிட பிரயாணத்துக்குப் பின் அடைந்த அருமையான கிராமம் திருவெள்ளியங்குடி. பெருமாள் கோவில் திறக்கப் படாததால் அருகிலுள்ள ஒரு சிவன் கோவிலை அங்குள்ள மக்கள் திறந்து விட, நம் குழு அங்கு விளக்குகள் ஏற்றி கோவிலையே ஒரு அதிகாலை தரிசனத்திற்கு வழி வகுத்துக் கொடுத்தது ஒரு நல்ல அனுபவம். மார்கழி அதிகாலையில் அங்கு உள்ள கிராம மக்கள் தெருவைக் கூட்டி, விட்டு வாசலில் கோலங்கள் போட்டது கடும் குளிரையும் மறந்து நின்று பார்க்கத் தூண்டியது .
















பின் அங்குள்ள கோலவில் இராமனை  தரிசித்ததில் தெரிந்து கொண்டது இங்கு வந்தால் எப்பேர்ப்பட்ட கண் சார்ந்த நோய்களும் குணமாகி விடும் என்பதே. அதன் பின் திருஆதனூர் என்ற அழகிய கோவிலைத் தரிசித்து திரு புள்ள பூதங்குடியில் கண்ட ஒரு அதிசயம் 'உத்யோக நரசிம்மர்' .

பின் சென்ற கபிஸ்தலத்தில் , கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த கஜேந்திர வரதரின் அமோகக் காட்சியைக் கண்டு அதிசயித்து பின் சென்ற திரு ஆடுதுறை என்ற தலத்தில் மரத்தில் தாமாகவே தோன்றிய சங்கு வியக்க வைத்தது.



அதன்பின் சென்ற, கும்பகோணம் - தஞ்சை பிரதான சாலையில் அமைந்திருக்கும்  திருக்கண்டியூர் என்ற கோவிலில் இருந்த பட்டர் கொஞ்சம் அவசரமாகவும் கோபத்திலும் இருந்ததால் ஒரு அவசர தரிசனத்துடன் நகர்ந்தது நம் குழு .

  காஞ்சியில் ஒரு சிவத்தலத்தினுள் அமைந்த திவ்ய தேசம் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் தஞ்சை அருகே உள்ள தஞ்சை மாமணிக் கோவில் என்ற திவ்ய தேசமோ மூன்று கோவில்களைக் கொண்டது. அதாவது, மூன்றும் சேர்ந்தது தான் ஒரு திவ்ய தேசம் !!

தஞ்சையில் ஒரு நிறைவான மதிய உணவிற்குப் பிறகு வெகு நேரம் பயணித்து அடைந்த இடம் திருப்பேர் நகர் என்ற கோவிலடி.



 வெகு சீக்கிரமே வந்ததால் அந்த கிராமத்தை ஒரு சுற்று சுற்றி வர நேர்ந்ததில் காண முடிந்தது கோவிலுக்கு எதிரிலேயே உள்ள ஒரு வீட்டில் இந்தக் கோவிலின் அப்பக்குடத்தான் பெருமாளுக்குப் பிரதான பிரசாதமான அப்பம் செய்யும் இடம். பெருமாளுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் நான் போய் வாங்கி வந்த பாலை வைத்து காபி போட்டுக் கொடுத்து இந்தக் காலத்திலும்  காசைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளாமலிருந்து அதிசயிக்க வைத்தது.

பின் சென்ற திரு அன்பில் என்ற கோவிலில் பட்டர் விளக்கை அணைக்கச் சொன்னதும்  தக தகவென்று மின்னும் பெருமாளை கண்டது சிலிர்க்க வைத்த தரிசனம். நாளின் கடைசி கோவில்களாக உத்தமர் கோவிலும், உறையூரையும் கண்டு பின் சென்றடைந்தது ஸ்ரீ ரங்கம்.

பொது விடுமுறையாதலால் சொல்ல முடியாத கூட்டம் என்று முதல் நாளே பீதியைக் கிளம்பியதால் மீண்டும் , தொடர்ந்து  ஐந்தாவது நாளாக சீக்கிரம் எழுந்து கோவிலருகே எல்லோரும் கை காட்டிய 'முரளி கடையில்' ஒரு சூப்பர் காபிக்குப் பின் கிளம்பிய எங்களுக்கு  ஸ்ரீ ரங்கனின் திவ்ய தரிசனம் உடனே கிடைத்தது பாக்கியமே.


தாயாரையும் , உடையவரையும் தரிசித்து வெளியே வந்து குழுவிற்கு அநேகமாக எல்லா கோவில்களையும் பார்த்த திருப்தியில் வீடு திரும்பும் மன நிலை வரத் தொடங்கி இருந்ததில் ஆச்சரியமில்லை.

உள்ளூர் வாசி கை காண்பித்து உதவிய ஒரு எளிய மெஸ்ஸில் அருமையான சிற்றுண்டிக்குப் பிறகு சென்னை நோக்கிப் புறப்பட்டு வந்து சேர்ந்ததோ பயணத்தின் நாற்பதாவது திவ்ய தேசமான திருவெள்ளறை.



 முடிக்கப் படாத மொட்டைக் கோபுரம் , ஆனால் நெகு நெகுவென ஓங்கி வளர்ந்து நின்ற புண்டரீகாட்ச பெருமாள் வருபவர்களை சுண்டி இழுத்தது. கோவிலின் பிரமாண்டத்தாலும் , பயணக் களைப்பினாலும் ஒரு சிலர் தாயார் சன்னதியை பார்க்காது நகர அங்குள்ள பட்டர் கோபமடைந்து எப்படி அவர்களெல்லாம் பாபிகள் என்று சொன்னதை விட அவர் சொன்ன 'எமன் உங்களைக் கண்டவுடன் கள்ளரைக்கு வருமுன் வெள்ளறையைக் கண்டாயோ என்று கேட்பான்' என்று சொன்னது மேலும் அழுத்தமாகப் பதிந்தது.

ஒரு மிகுந்த மன நிறைவுடன்  நாற்பது திவ்ய தேசங்கள் , மேலும் மூன்று பிரசித்த பெற்ற சிவ ஸ்தலங்கள் என்று ஐந்து நாட்களில் பார்த்து, நிறைவாக திருச்சியில் எங்கள் குல தெய்வத்தையும் பார்த்து நன்றி சொல்லி விட்டு வந்த போது அடைந்த மன நிறைவுக்கு முன் ஐந்து நாள் அசதியும், உடல் வலியும்  காணாமல் போயிருந்தது .

 சென்ற இடங்களில் எல்லாம் எழுந்த ஒரே வியப்பு , நம் தேசத்தில் இவ்வளவு பழமையான, புராணச் சிறப்பு வாய்ந்த இத்தனை தலங்களா !

இவையெல்லாம் கட்டுக் கதை இல்லை - ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள். ஏகப்பட்ட சான்றுகள் இருக்கின்றன - சான்று என்று ஒன்று தேவைப்பட்டால்.

இவற்றையெல்லாம் தரிசிக்க தேவைப் படுவது நிதி மட்டுமல்ல  - குறிப்பாகச் சொன்னால் நிதி பட்டியலில் கடைசியில் தான் வரும்.

முதலில் உடல் ஆரோக்கியம், இவ்வளவு இடங்களுக்கும் நேரம் விரயமாகாமல் கூட்டிச் செல்ல ஸ்ரீ ஜானகி டூர்ஸ் போன்ற நல்ல பயண ஏற்பாட்டாளர்கள்,  நல்ல தங்குமிடம், உடலுக்கு சுகமான ஆகாரங்கள் , அழைத்துப் போக வழிகாட்டி, கூட வர அதே மன ஓட்டமுடையவர்கள், நண்பர்கள்- இவை அனைத்தையும் ஒன்று சேர்ந்து சீராக கிடைப்பது என்பது தான் ஒருவரின் அதிருஷ்டம். எங்களுக்கு கிட்டியது.

முயன்றால் உங்களுக்கும் கிடைக்கும். நீங்களும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Note: To view more pictures on this Divya Desam tour , please visit my picture blog:  http://kapalipics.blogspot.in/2017/01/forty-divya-desams-some-frozen-frames.html