Monday, March 23, 2020

அநித்யம் அளிக்கும் அறிவுரைகள்

"என்னால அடுத்த வாரம் வர முடியாது -  நான் ஒரே பிஸி"

"அடுத்த மாசம்  ரயில்ல  மூணு மிடில் பெர்த்து தான்  இருந்துது- புக் பண்ணிட்டேன் .  நல்ல வேளை அப்பர் பெர்த்துல எனக்கு  மூச்சு திணறும்"

"ஏப்ரல் கடைசில தான் முந்நூறு ரூபாய் தர்சன் டிக்கட் இருக்கு - இப்பவே முன்பதிவு பண்ணிட்டேன்"

"அடுத்த வாரம் சனிப் பிரதோஷம் - அப்ப பார்க்கலாம்"

எத்தனை நம்பிக்கை   , எவ்வளவு ஏற்பாடுகள், எவ்வளவு முன் யோசனைகள் - அத்தனையையும் நொடியில் நசுக்கியது  - சின்ன கிருமி !

வெளியூரா போகப் போகிறாய் மூச்சு விட முடியுமா என்று முதலில் பார் என்று ஏளனம் செய்தது எள்ளி நகைத்தது , மனித மூளையினால்  கண்டு பிடித்த கருவியில் பெரிதாகத் தெரிந்த அந்தக் கிருமி

அன்று படித்த  "இந்த சின்ன நூல்கண்டா நம்மை சிறைப் படுத்துவது"  என்ற புத்தகம் ஞாபகத்துக்கு வருகிறது.

நம் வாழ்க்கையின் நிரந்தமற்ற தன்மையை நிரூபிக்க  இதை விட வேறு எந்த உதாரணம் தேவை ?

ஆழிப் பேரலை அறிவுறுத்தியது - அலட்சியப் படுத்தினோம் , நாம் தான் கடற்கரைப் பக்கத்தில் இல்லையே என்று.

பூமி, தன் அதிருப்தியைக் காட்டுவது போல்,  பலமாக நடுங்கியது - கண்டு கொள்ளவில்லை .

மற்றவர்களின் நலனைத் துச்சமென மதித்து நான் , என் மக்கள் , என் பணம், என் சொத்து என்னை யார் என்ன செய்ய முடியுமென்று கொக்கரித்த பொழுது -

என் பண, பதவி  பலத்திற்கு முன் யார் என்ன செய்ய முடியும் என்று எண்ணும்   பொழுது-

வலியவர்களின் கொடுமை தாங்காமல் எளியவர்கள் இதற்க்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா என்று எண்ணிய பொழுது-

தீயவர் வாழவும்  நல்லவர் தாழவும் ... இது தர்மம் தானோ என்று ஒன்றும் செய்ய முடியாமல் நல்லவர்கள் கலங்கிய போது

நான் இருக்கிறேன் என்று கிளம்பியது ஒரு சின்னக் கிருமி

என் சக்தி எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று சவால் விடுவது போல்  உலகின் வலியதொரு நாட்டை முதலில் உலுக்கியது

என்று வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் என்று சொல்வது போல் உலகின் மிகப் பெரிய சுவற்றை  அலட்சியமாகத் தாவி கடல் கடந்து கதி கலங்க வைத்தது

எத்தனை பணமும் படையும் இருந்தாலும்  என் முன்னே வாய் மூடி,  நான்கு சுவற்றுக்குள்  தான் உன் ராஜ்ஜியம் என்று உலக  ராஜா ராணிக்களையும்   ஒதுக்குப்ப்புறம் தேட வைத்தது

கடவுளோ இயற்கையோ , அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து , நமக்கு மேல் எதோ ஒன்று, நாம் கட்டுப்படுத்த முடியாமல், நம்மையும் நம் ஆசைகளையும் நம் ஆணவத்தையும் நம் அகங்காரங்களையும் நொடிப் பொழுதில் மண்ணில் புதைக்கக் கூடிய சக்தி எதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர வேண்டிய நேரமா இது ... சிந்திப்போம்

விஞ்ஞானமும்  அறிவியலும் கொடுத்த திமிரில் ஆடுவதை நிறுத்த வேண்டிய நேரமா இது....சிந்திப்போம் 

நான் எனது எனக்கு என்பதைப்  புறந்தள்ளி   நல்லது,  நல்லவை என்பதை உணரும் நேரமா இது .... சிந்திப்போம்

ஆயிரக்கணக்கான கோடிகளும் இடுப்புத் துணியுடன் அவிழ்த்து விடப்படும் என்பதை அறிவுறுத்தும் நேரமா இது .... சிந்திப்போம்

நான் எல்லாவற்றிற்கும் மேற்பட்டவன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது போனற மமதைகளைக் களையும் நேரமா இது ..... சிந்திப்போம்

என்னை, என் செயல்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை விடுத்து,  உன் மனசாட்சியே உன்னை செலுத்துபவன் என்பதை உணரும் நேரமா இது ..... சிந்திப்போம் 

எப்படியோ வாழ்வதை விட என் மனம் அனுமதி அளித்த மற்றவர்களைத் தள்ளி விட்டு , அவர்கள் மேல் ஓடி சம்பாதிக்காமல் என் உழைப்பில் எனக்கு எது கிடைக்குமோ, கிடைத்தது சந்தோசம் என்று உணர்ந்து செல்லும் நேரமா இது ..... சிந்திப்போம்  .

மற்றவர்களின் உணர்வுகளை புண் படுத்தாமல் நான் என் நம்பிக்கையைப் பற்றி வாழ வேண்டிய நேரமா இது .... சிந்திப்போம்

நாளைப்பொழுதை  புறந்தள்ளி இன்று, இந்த நொடிக்காக வாழ வேண்டிய நேரமா இது.... சிந்திப்போம்

இயற்கை கொடுக்கும் கடைசி வாய்ப்பு ... நழுவ விட வேண்டாம் ... உணர்ந்து, திருந்தி , சிரம் தாழ்த்தி கை கூப்பி நன்றியுடன் நகர்வோம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்

இதுவும் கடந்து போம் !!

குளிர்ந்த இயற்கைக் காற்றை அனுபவிக்க முடியாத , நண்பர்களையும் உறவினர்களையும் அன்பாகக் கட்டித் தழுவ முடியாத, விருப்பத்திற்கு வெளியே செல்ல முடியாத ,  தடை இன்றி சுவாசிக்க முடியாத, வீட்டுக்குள்ளிருந்தே மற்ற நல்லவர்களுக்கு கை தட்ட வேண்டிய கட்டத்திற்குத் தள்ளப்பட்ட பொழுது வந்த அந்த 2020இன்  மார்ச்சு மாதக் காலைச்   சிந்தனைகள்