Sunday, December 3, 2023

மழைக்கால ஞானம்

 வெளியே மழை பின்னிக் கொண்டிருக்கிறது . அநேகமாக காற்று பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் - அதைக் கண்டவுடன் மழை  சோவென்று இரைச்சலுடன் அதிகமாக ஒரு கொட்டு கொட்டுகிறது. முன்பெல்லாம் மழை வந்தால் குஷியாக இருக்கும். புயலென்றால் பரம சந்தோஷம் . இத்தனைக்கும் வீட்டிலுள்ள பாத்திரங்களெல்லாம் சொல்ப வாடகை வீட்டிற்குள் வந்து எல்லா அறைகளிலும் தங்கி வருணனின் கொடையை தாங்கிக் கொண்டிருக்கும். அப்படியும் ஒரு சந்தோஷம் . முக்கியமாக பள்ளி கிடையாது. இருக்கும் சின்ன அறையில் அண்ணன் தம்பி அக்கா தங்கை அனைவரும் தஞ்சம். என் காலேஜ் வாத்தியார் அண்ணா கற்பனை சிறகடிக்க வீட்டிலுள்ள போர்வைகளை திரையாக வைத்து உடனே ஒரு நாடகத்தை அரங்கேற்றி விடுவான். கதை வசனம் எல்லாம் அவனே . கடைக்குட்டியான எனக்கு எப்பொழுதும் ஒரு பராக் பராக் சொல்லும் வசனமே .

எனக்கு நினனவு தெரிந்த முதல் புயல் , 1967 என்று நினைக்கிறேன் நாங்கள் மயிலை கீழ மாட வீதியில் வசிக்கும் பொழுது தான் . வெளியே போய் மழை பார்த்தால் என்ன ஆகும் என்று அப்பாவிடம்  கேட்டுக் கொண்டிருக்கும் போதே , அருகிலுள்ள தேரின் கூரையிலிருந்து வந்த  ஒரு தகரம்  சர்ரென்று ராக்கெட் போல் கடந்ததும் அலறி அடித்துக் கொண்டு உள் அறைக்கு ஒடினது இன்னும் தெளிவாக நினைவுக்கு வருகிறது.  

பிறகு வந்த சில புயல் மழையில் சென்னையின் முக்கிய பகுதியில் வசிக்கும் பொழுதும்  மின்சாரம், தொலைபேசி இல்லாமல் ஒரு வாரம் தள்ளியது ஒரு புதிய அனுபவம். 

இன்றைய மிஃஜாம் புயல் ஒரு புதிய விழிப்புணர்வைக் கொடுத்தது. வெளியூர்களில், மற்ற நாடுகளில் இருக்கும் உறவெல்லாம் வானிலை செய்தி பார்த்து 'எல்லோரும் பத்திரமாக இருக்கவும். தேவையானதெல்லாம் வாங்கி வைத்தாச்சா - பால், கறிகாய் , மருந்து, மெழுகுவர்த்தி, நொறுக்கு தீனி , இத்தியாதிகள் ' என்று கேட்க இரவில் மழை சத்தத்தை  சுகமாக அனுபவித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று விழிப்பு . உய் உய் என்று சத்தத்துடன் ஓர் ஆம்புலன்ஸ் விரைந்தது. இங்கே சிலர் அமைதியாக அடை மழையில் உறங்கிக் கொண்டிருக்க யாரோ உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் . அதையும் விட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இந்த மழை காற்றிலும்   விரையும் அந்த ஆம்புலன்சில் ஓட்டுனர் !?. 

இப்படி  நினைத்துக் கொண்டிருக்கும் போழுதே மின்சாரம் போனது. இரண்டு நிமிடங்களில் மீண்டும் விளக்கு துடித்து வந்தவுடன் மறுபடியும் நினைவுக்கு வந்தவர் கீழ் தளத்தில் உள்ள காவலாளர்- உடனே ஜனரேட்ட்ரை உயிர்ப்பித்து ஒளி கொடுத்தவர் .

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அவரைப் பார்த்து காபிக்கு காசு கொடுத்து , பகல் சாப்பாட்டிற்கும் ஏற்பாடுகள் முடிந்தது என்று தெரிந்ததும் தான் சிறிது நிம்மதி வந்ததது.

 மின்சாரமும், ஒழுகாத கூரையும், சூடான காபியும் நமக்கு மட்டும் இருந்தால் போதாது. நம்மைச் சுற்றி உள்ள  காவலாளியும், ஆம்புலன்ஸ் ஓட்டுனரும்,  தெரு முனையில் உள்ள ஆட்டோக்காரரும் , அயன் பண்ணுபவரும்,  நாம் தினமும் சந்திக்கும் நம் வீட்டு வேலைக்காரியும் சுகமாக இருந்தால் தான் நாம் நிம்மதி அடைய முடியும் என்பது பளிச்சென்று விளங்கியது. 

இந்த மாதிரி நேரங்களில் நம்மால் முடிந்ததை நாம் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன்   மாடிப்படி ஏறும் பொழுது திரும்பிப் பார்த்தால் வாசல் அருகில் இருந்த காவலாளிக் கூ ண்டு  போதி மரம் போல் தெரிந்தது,  என் பிரமை தானோ !!