Showing posts with label மை. Show all posts
Showing posts with label மை. Show all posts

Monday, April 11, 2016

வாழ்வில் எத்தனை 'மை'?

சில மாதங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒரு பெரியவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். பல வருஷங்களுக்கு முன்னால் நல்ல  பதவியில் இருந்தவர், தன் பெரிய குடும்பமான பல பெண்களுக்கும்  நல்ல முறையில் கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்னும்  கையில் ஒரு கணிசமான தொகையுடன் ஓய்வு பெற்று யார் கையையும் நம்பாமல் தனித்து, தன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். எப்பொழுதுமே சிரித்த முகம், வாய் நிறைய புன்னகையுடன் 'வாங்க வாங்க' என்று வரவேற்ப்பார்.

வாழ்க்கைதான் அவ்வளவு சுலபமில்லையே. அவரது மனைவிக்கு சின்ன விபத்து நேர்ந்து நடப்பதில் சிரமமிருந்தாலும், அப்படியே காலம் தள்ளிக் கொண்டிருந்தார். கொஞ்ச காலமாக, வெளியே போவதில்லை- கண் பார்வை மங்குவதால், வயதும் ஏறிக்கொண்டே இருப்பதால் - ஞாபக மறதியும் தொற்றிக் கொண்டிருந்தது.

இந்த முறை என்னைப் பார்த்தவுடன் வரவேற்று, உபசரித்ததைப் பார்த்து நான் மகிழ்வதற்க்குள் "நீங்கள் யார்" என்றார் ! எனக்கு அவரின் நினைவு தப்புவதைப் பார்த்து பரிதாபப் படுவதா அல்லது யாரென்று புரியாமலே வாய் நிறைய வரவேற்ற உள்ளத்தைக் கொண்டாடுவதா என்று புரியவில்லை. அதன்பின் அவர் மனைவி வந்து "நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுகாதேங்கோ " என்றார்.

என்னைத் தடுமாற வைத்தது - அவரின்  அன்றைய நிலை

சில வருஷங்களுக்கு முன் என் மற்றொரு நண்பர் ஒருவர் இப்படித்தான் - நன்றாக இருந்தவர், திடீர் வியாதியால் மூக்கில் டியூபெல்லாம் வைத்து கடைசி வரை பேச முடியாமலே போய் விட்டார். இறுதி நேரத்திலும்  அவர் மனதில் என்ன நினைத்தார் என்பதே தெரியாமல் போய் விட்டது.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங், அவருடைய மிகப் பெரிய ஆசையாக 'அனாயாச மரணத்தை'த் தான் குறிப்பிட்டுருந்தார்.

பலருக்கும் உள்ள பல பயங்களில் மிகப் பெரிய பயங்களில் ஒன்றானது - நினைவிருந்தும் பேச முடியாமல் கட்டுப்படுத்தப் பட்டிருப்பதுதான். அது ஒரு கொடுமையான நிலை. நம் உற்றார் உறவினர்களைப் பார்க்க முடியும், ஆனால் பேச முடியாது. சில சமயம் கனவுகளில் இது போன்ற காட்சிகள் வரும் - குப்பென்று வியர்த்து எழுந்திருப்போம்.

அந்தப் பெரியவர் சுருண்டு படுத்துக் கிடந்த கோலம், என் மனதைப் பிழிந்து விட்டது. எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், எந்த ராஜ்ஜியத்தை ஆண்டவனாக இருந்தாலும், கம்பங்களியோ, தங்கபஸ்பமோ எது தின்றாலும் முதுமை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

முதுமை என்பதே நிறைய பேர் விரும்பாத,  பலர் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு கட்டாய நிலை.

அதில் உறவினர்கள், நண்பர்கள்  சூழாமல் தனிமை என்பது கொடுமை.

இந்தக் கொடுமையே பலருக்கு மனதளவில் பாதித்து வெறுமையையும் ஏற்படுத்தும்.

இதில் வறுமையும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம், மனிதனின் வேதனைக்கு.

 இதில் கல்யாணமாகாத பெண் என்று நிறைவேறாத கடமைகளும் மீதமிருந்தால் வியாதியே தேவையில்லை

 முதுமை, தனிமை, வெறுமை, வறுமை, கடமை - வாழ்வில் இவ்வளவு மைகளா?

இதில் பொறுமை எப்படி வரும்?