Showing posts with label திரை அனுபவம். Show all posts
Showing posts with label திரை அனுபவம். Show all posts

Wednesday, March 6, 2013

வன யுத்தம்

என்றுமே எனக்கு சந்தனக் கடத்தல் வீரப்பன் போன்றவர்கள் மேல் எந்த விதமான இரக்கமும் இருந்தது கிடையாது. ஒரு உயிரையே கொல்லக் கூடாது  என்பவனுக்கு, இத்தலை கொலைகள் செய்தவன் மேல் வேறு எப்படிப்பட்ட எண்ணம் இருக்கக் கூடும். ஆனால், வீரப்பனைப் பற்றியும், அவன் ஏன் இப்படி மாறினான், எப்படிக் கொல்லப் பட்டான் என்று வந்த  பல செய்திகளினால் ஓர் ஆர்வம் எழுந்தது. நாணயத்தின் மற்றொரு பக்கத்தையும் பார்க்கும் ஆர்வம் தூண்டப்பட்டது. அதனாலேயே, 'வன யுத்தம்'  படத்தைப் பார்ப்பதற்க்காகக் காத்திருந்தேன்.  இன்னும் கொஞ்ச நாட்களில் அரங்கை விட்டுப் போகும் வாய்ப்பு அதிகமானதால் இன்று துணிந்தேன்.

பரபரப்புடன் தொடங்கிய படம், பத்து நிமிடங்களில் பிசு பிசுக்க ஆரம்பித்தது. ஒரு சின்ன உத்தியை நன்றாக வளர்க்காமல், ஐந்து நிமிடங்களில் அதை விட்டு அடுத்த சம்பவத்துக் கூட்டிச் செல்லப் படுகின்றோம். ஒவ்வொரு சம்பவத்துக்கும் இடையே அப்படி ஒரு வேகம். கீழே போடப்படும் இடம் பற்றிய எழுத்துக்களும் நம்மிடம் போட்டி போடுகின்றன.  இந்த வேகத்தினால் படம் பார்க்கும் எண்ணம் போய் எதோ புத்தகம் படிப்பது போலிருந்தது.

அனேகமாக தமிழ் நாட்டில் பலருக்கும் வீரப்பன் கதை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் இதைப் பார்க்க மெனக்கெடுவது, தெரியாத உண்மைகளைத் தேடி. ஆனால் ஏமாற்றப் படுகிறார்கள்.

ஒவ்வொரு சம்பவமாக கையிலெடுக்கிறர்- இளம் பிராயம், ஏன் யானைத் தந்தத்திலிருந்து சந்தன மரங்கள், இளம் காட்டதிகாரி ஸ்ரீனிவாசை நம்ப வைத்துக் கொல்வது, குண்டு வைத்து போலிஸ் ஜீப்பை தகர்ப்பது, ராஜ்குமாரைக் கடத்துவது, சுட்டுக் கொல்லப் படுவது என்று. ஆனால் எதிலும் எதிர்பார்க்கும் அதிகப் படியான செய்திகள் இல்லை. இந்தச் சம்பவங்கள் தான் ஏற்கனவே தெரியுமே- அல்லது வலையில் நிரைய இருக்கே. இதற்க்கு எதுக்கு நான் 150 ரூபாய் கொடுத்து பார்க்கணும்?  ஒரு நல்ல கதையை சொல்லத் தெரியாமல் வீணடித்திருக்கிறார்.  பாலச்சந்தரும், சுஜாதாவும் பிறந்த தமிழ்னாட்டில் கதை சொல்லத் தெரியவில்லை என்றால் வெட்கமாக இருக்கு.

இந்தக் கதைக்கு ஏன் இப்படி சென்சாருடன் போராடினார்களென்று தெரியவில்லை. ஆனால் பல விஷயங்கள் காண்பித்த  மற்றும் காண்பிக்கப் படாத காட்சிகளினால் தெரிகிறது இது வெளி வர பட்ட பாடு. புரியும் என்று நினைக்கிறேன் !

நடு நடுவில் வரும் ஏகப்பட்ட ஆங்கில வசனங்கள் யாருக்கு என்று தெரியவில்லை. 'பொல்லாதவனு"க்குப் பின், நான் கிஷோரின் பெரிய விசிறி. ஆனால், படத்தில் அர்ஜுனைத்தவிர யாரும் நடிக்க முயர்ச்சிக்கக் கூட இல்லை என்பதுதான் வருத்தமே. அர்ஜுனுக்கு இந்த ரோல் அல்வா சாப்பிடுவது போல் . சும்மா ப்ரேக்கில் வந்து  அனாயாசமாக  நடித்து விட்டுப் போயிருக்கார். பெயருக்கு ஒரு பெண்ணை அறிமுகப் படுத்தியவுடன் நான் கூட பயந்தேன், ஏதாவது டூயட் வந்துடப் போர்தேன்னு - நல்ல வேளை.

காயம் பட்ட போலீஸ் அதிகாரியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போவதற்க்கென்ன இவ்வளவு பரபரப்பு? ஏதோ க்ளைமாக்ஸ் போன்ற தேவையற்ற பில்டப்.

படத்தின் உண்மை நாயகன் காமிராதான். அழகை அள்ளி அள்ளிக் காண்பித்திருக்கு- ஆனால் கதை இல்லாததால் எடுபடவில்லை.

வீரப்பனைப் பார்த்தால் பயம் வரவில்லை. மேக்கப்பும் , சிந்தனையும் போறாது. பின்னிசையை வைத்து பயமுறுத்தப் பார்த்துத் தோல்வியே அடைகிறார் .

ஒரு நல்ல கதையையும், சந்தர்ப்பத்தையும் வீணடித்து, தமிழ்னாட்டு மக்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். அவர்கள் காசையும், நம்முடைய நேரத்தையும் விரயமாக்கியது தான் மிச்சம்.

படம் முடிந்தவுடன், பெயர்கள் போடப்பட்டும், சில உண்மையான பாத்திரங்களைக் காட்டும் பொழுது, அரங்கில் உள்ள மக்கள் அப்படியே நின்று பார்த்தனர்- இவர்களுக்குத்தான் இன்னும் எத்தனை நம்பிக்கை தமிழ் சினிமாவின் பெயரில்.