Tuesday, November 19, 2013

தந்தையின் தாலாட்டு

அந்த பட்டை உரிக்கும் வெய்யிலில் நாங்கள் சென்னை ஆள்வார்பேட்டை சிக்னலைக் கடந்து நடந்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கு. எந்தவிதச் சட்டக் கட்டுப் பாடும் இல்லாத அந்த நாட்களில் அப்பொழுதுதான் சொல்லி இருந்தார்கள், எங்களுக்குப் பிறக்கப் போவது ஒரு பெண் குழந்தை என்று.

எங்களுக்கு எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாததால், அந்தக் கால சூழலுக்கு மாறாக, ஒரு சந்தோஷம் தான் நிலவியது. பலர் நம்ப மறுப்பார்கள் ஆனால் உண்மையென்னவோ அப்பொழுது தோன்றிய ஒரு எண்ணம் 'இந்தப் பெண் நம் வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு ஒரு நாள் போகத்தான் போகிறாள்' என்று. அந்தப் பாலம் வரும்பொழுது கடந்து கொள்ளலாம் என்று அவசரமாக தலையை உலுக்கி அந்த எண்ணத்திலிருந்து விடுவித்துக் கொண்டேன்.

ஒரு பிள்ளையைச் செல்வம் என்பது ஏன் என்பது அது வளர வளர்த்தான் புரியும். அது முதலில் மல்லாந்து கொண்டே சிரிப்பது, பின் குப்புறப் படுத்து தலையைத் தூக்கிப் பார்ப்பது, நகர முயற்ச்சித்து முடியாமல் வாழ்க்கையின் முதல் தோல்வியில் துவண்டு வாய் கோணி அழுவது, பின் மற்றவர்களின் உந்துதலால் முன்னேறி விசுக் விசுக்கென்று அடி வயிற்றால் முன்னேறி துறத்தும் தாயை ஒட வைப்பது, தத்தி தத்தி நடக்க ஆரம்பித்ததும் தகப்பனுக்கு ஒட்டப் பரீட்சை வைத்து மூச்சு வாங்க வைப்பது, யாரும் பார்க்காதபோது கீழே கிடப்பதை வாயில் போட்டுக் கொள்வது - இது போன்ற எத்தனையோ விளையாட்டுக்களை ஒவ்வொன்றாக நடத்தி காட்டி , இன்பத்தை ஒரு வங்கிக் கணக்கு போல் சேமிப்பதாலோ அதற்க்குச் செல்வம் என்று பேர் வந்தது? இதையெல்லாம் அனுபவிக்காத பெற்றோர்கள் செல்வத்தை சிட் பஃண்டில் போட்டவர்கள் போலாவார்கள் !

என் பெண்ணை ஒவ்வொரு நிலையிலும் அருகிலிருந்து பார்த்து அனுபவித்த பாக்கியம் எனக்குக் கிட்டியது. எல்லா பொம்மைகளுடனும் விளையாடியது, ஊட்டி, கோடை பார்க்குகளில் ஓட விட்டது, படகு சவாரி செய்தது, கை பிடித்து ஸ்கூலிலுருந்து அழைத்து வந்தது, சாயந்திரம் அழைத்துவரச் செல்லும்போது உள்ள ஒரு எதிர்பார்ப்பு, கசங்கிய யூனிபாஃர்ம் கன்னத்து அழுக்குடன்  என்னைப் பார்த்ததும் பளீரென்று சிரித்தது- தனி சுகம்.

இன்று போலிருக்கு- முதன் முதலில் பென்ஸில் பிடித்து எழுத வராமல் அவள் அழுத போது, நானும் அவளை விடக் கீழிறங்கத் திட்டியது - இன்று அவளின் அச்சுப் போன்ற கையெழுத்தைப் பார்த்தால் என் அன்றைய கோபம் இன்று என்னை வெட்கப் பட வைக்கிறது.

அவளுடன் உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுதியது, எல்லாப் போட்டிகளுக்கும் அவளைத் தயார்  செய்தது- கொன்றை வேந்தன் எல்லா வரிகளையும் அலட்சியமாகச் சொல்லி முடித்து பரிசு வாங்கி வந்தவுடன், பரிசின் அருமை தெரியாமல் அவள் சாக்லேட் எங்கே என்று கேட்டது- இன்று இனிக்கிறது .

இன்றைய தலை அஜீத் கையால் அன்று பரிசு வாங்கிய பெருமை இன்று தான் அவளுக்கு உறைக்கிறது !!

இந்தக் கடுமையான போராட்டங்களுக்கிடையில் அவள் எப்பொழுது என் குழந்தையிலிருந்து என் நண்பி ஆனாள்?

அவளின் கடினமான நேரங்களில்  கண் கலங்கியவளை நான் அணைத்த போதா?

கூட நடந்து வரும் போது அறிவுரை சொல்லாமல் அவளைப் பேச விட்ட போதா?

அவள் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்து அனுசரித்துப் போன போதா?

அவளை ஒரு அப்பாவுக்கு பயப்படும் பெண்ணாக இல்லாமல் , ஒரு நல்ல தோழமைக் கூட்டணியாக நடத்திய போதா?

எப்படியோ தெரியாது. ஆனால் இவற்றினூடே  எப்பொழுதோ நான் பிடித்துக் கொண்டிருந்த விரல் மாறி என் விரல் அவளின் கையில் தஞ்சமான அன்று எனக்கு ஒரு சினேகிதி கிடைத்தாள்.

ஒரு வளர்ந்த பெண் பெற்றோருக்கு ஒரு வரப் ப்ரசாதம். எல்லா விஷயங்களிலும் கலந்து பேசிக் கொள்ளலாம்.

அவளின் புரிதல் அபீசிலிருந்து வந்த நான் அசதியுடன் எதுவும் பேசாமல்  சாய்வு நாற்காலியில் பாதி கண் மூடி  இருக்கும்போது கால் அமுக்கி விட்டு  " ஆபீஸில் ஏதேனும் ப்ரச்சனயா" என்ற கேள்வியில்  தெரிந்தது.

அவளின் அக்கறை , கேலிக்காக நான் முதியோர் இல்லம் பற்றிய விளம்பரங்களை ஊன்றிப் படிக்கும்போது வரும் கோபத்தில் தெரிந்தது.

அவளின் குழந்தைத்தனம், என்னை டைனிங் டேபிள் சுற்றி விரட்டியதில் தெரிந்தது

திருமணப் பேச்சு ஆரம்பித்தபின், அவள் முகத்தில் தெரிந்தது கவலையா, வரப்போகும் பிறிவினால் ஏற்ப்படும் சோகமா என்று தெரியாமல் மறைப்பதில் புத்திசாலித்தனம் தெரிந்தது.

திருமணம் முடிந்து அவளைப் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கார் நகர்ந்தபின் தான் எனக்குப் புரிந்தது- நான் இத்தனை நாளாக "வந்த பிறகு பார்த்துக் கொள்வோம்" என்ற அந்தப் பாலம் விச்வரூபமெடுத்து என் முன்னே நிற்கிறது என்று !

இந்த உலகிலேயே  ஒருவர் ஒரே நேரத்தில் சந்தோஷத்தின் உச்சியிலும், சோகத்தின் பிடிப்பிலும் இருப்பார் என்றால் அவர் பெண்ணைப் பெற்றவராகத்தான் இருக்க முடியும்.

தன் மாப்பிள்ளையிடம் பெண்ணை அறிமுகப் படுத்தி, கோத்ரம் மாற்றி கன்னிகாதானம் செய்யும் பொழுது, ஒரு தகப்பன் பெருமையின் உச்சிக்குச் செல்கிறான்.

இது நடந்த உடனே பெண் தன் வீட்டை விட்டு கணவனுடன் போகும்பொழுது பேச்சு வராமல் போகிறான்.

இதற்க்குப்பின் அவன் வாழப் போவது இது வரை வாழ்ந்த நினைவுகளிலும்,  இனி வரப் போகும் தன் பெருந்செல்வத்தின்  வாழ்க்கைக்காகவும்தான்.







No comments:

Post a Comment